நித்தியானந்தாவிடம் டாக்டர்கள் என்னதான் சோதித்தார்கள்? அதிருப்தியில் சிஐடி போலீஸ்!
பெங்களூர்: நித்தியானந்தாவிடம் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு முறையான ஆண்மை சோதனையை நடத்தவில்லை என்று பெங்களூர் சிஐடி போலீஸார் கூறுகிறார்கள். எனவே தேவைப்பட்டால் மீண்டும் சோதனை நடத்தக் கோரி கோர்ட்டை அணுகவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் என்பவர், நித்தியானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பிடதி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை சோதனை நடத்த அவர்கள் தீர்மானித்து கோர்ட்டை நாடினர்.
இதை எதிர்த்து தொடர்ந்து வழக்குகளாகப் போட்டு வந்தார் நித்தியானந்தா. கடைசியில் உச்சநீதிமன்றம், கண்டிப்பாக ஆண்மை சோதனைக்கு நித்தியானந்தா உடன்பட வேண்டும் என்று கூறி விட்டது.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை சோதனை நடைபெற்றது.
சிரித்த முகத்துடன் என்ட்ரி
இந்த சோதனைக்கு தனது சிஷ்ய கோடிகள் புடை சூழ சிரித்த முகத்துடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார் நித்தியானந்தா.
சோர்ந்து போய் திரும்பிய நித்தியானந்தா
சோதனைகள் பல கட்டமாக நடத்தப்பட்டன. அவை முடிந்ததும் சோர்ந்து போன முகத்துடன் வெளியே வந்தார் நித்தியானந்தா.
நடந்தது என்ன...
நித்தியானந்தாவுக்கு டாக்டர் துர்கண்ணா தலைமையில் டாக்டர்கள் கேசவமூர்த்தி, சந்திரசேகர் ரத்கல், டாக்டர் வெங்கடராகவ், வீரண்ணா கெளடா, டாடக்டர் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய குழு சோதனைகளை நடத்தியது.
என்ன சோதனை
நடந்த சோதனைகள் குறித்து மருத்துவ கண்காணிப்பாளர் துர்கண்ணா கூறுகையில், காலை எட்டரை மணிக்கு வெறும் வயிற்றுடன் நித்தியானந்தாவை வரச் சொல்லியிருந்தோம். சோதனைக்கு முன்பும், பின்பும் அவர் பத்து நிமிடம் ஓய்வு தரப்பட்டது. பிற்பகல் 1.30 மணி வரை சோதனை நடந்தது.
சொல்லி விட்டுச் செய்தோம்
அவரிடம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லி விட்டே அனைத்தையும் செய்தோம். அவருடைய சம்மதத்தின் பேரில்தான் அனைத்தும் செய்யப்பட்டன. முதலில் அவருக்கு உளவியல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் உறுப்பு எழுச்சி சோதனை நடைபெற்றது. பின்னர் அவரது சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன என்றார் அவர்.
விந்தணு சோதனை நடத்தவில்லை
டாக்டர் கேசவமூர்த்தி கூறுகையில், நித்தியானந்தாவிடம் நாங்கள் விந்தணு சோதனை நடத்தவில்லை. அதேசமயம், மருத்துவ பரிசோதனைக் கமிட்டி வழிகாட்டுதலின்படி தேவையான அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
போலீஸார் அதிருப்தி
ஆனால் நித்தியானந்தா ஆண்மை சோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் இதனால் சில முக்கிய சோதனைகளை டாக்டர்கள் நடத்த முடியவில்லை என்றும் சிஐடி போலீஸ் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான சோதனை அல்ல
இதுகுறித்து சிஐடி அதிகாரி ஒருவர் கூறுகையில் நித்தியானந்தாவுக்கு நடந்தது முழுமையான சோதனை அல்ல. எனவே இதன் மூலம் முழுமையான உண்மைகள் தெரிய வராது என்றார்.
"ஊசி போட விடாமல் தடுத்தார் நித்தியானந்தா"
ஆண்மை சோதனையின்போது தாம்பத்தியம் கொள்ளும் அளவுக்கு தகுதி இருக்கிறதா என்பதை அறிய போடப்படும் ஊசியை போட விடாமல் தடுத்து விட்டார் நித்தியானந்தா. அந்த சோதனை முக்கியமானது. ஆனால் அது நடத்தப்படவில்லை என்று சிஐடி போலீஸார் கூறுகிறார்கள்.
மீண்டும் கோர்ட்டுக்குப் போவோம்
நித்தியானந்தாவிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் கைக்கு வந்த பின்னர் அதை ஆராய்வோம். தேவைப்பட்டால் மீண்டும் சோதனை நடத்த அனுமதி கோரி கோர்ட்டை நாடுவோம் என்றும் சிஐடி தரப்பில் கூறப்படுகிறது.