ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு பெங்களூர் கோர்ட் அபராதம்!
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதிவாதத்தை தொடங்காத சசிகலா, சுதாகரன், இளவரசி மூவருக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும் இறுதி வாதம் நடைபெறும் நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தமது இறுதிவாதத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் இறுதி வாதம் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2 நாட்களாக சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் வாதம் தொடங்கப்படவில்லை.
மேலும் இறுதிவாதத்தை தொடங்க கால அவகாசம் கோரிய சசிகலா தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை இன்று 2வது நாளும் சசிகலா தரப்பினர் தொடங்கவில்லை.
இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இறுதி வாதத்தை தொடங்காததால் மூவருக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்
அத்துடன் இறுதிவாதம் நடைபெறும் நாட்களில் மூவரும் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.