பெங்களூருக்கும் வந்துச்சு மின்வெட்டு!
பெங்களூர்: வாக்குப்பதிவு முடிந்ததும் தமிழகத்தைப்போலவே பெங்களூரிலும் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இங்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
தமிழகம் அளவுக்கு கர்நாடகாவில் மின்சார தட்டுப்பாடு இல்லை. இதனால் கடந்த ஓராண்டாக பெங்களூரில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. கோடை காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளதாலும், ரெய்ச்சூர் அனல் மின் நிலையத்து கோளாறால் மின்தொகுப்புக்கு வரவேண்டிய 1000 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாலும், பெங்களூரில் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.
இத்தகவலை மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இதுவரை மின்சாரத்தில் தன்னிறைவு மிக்க மாநிலமாக கர்நாடகா உள்ளது என்று கூறிவந்த சிவகுமார், கடந்த மாதம் 17ம்தேதி கர்நாடகாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு அப்படியே பல்டியடித்துவிட்டார். பெங்களூரில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரமும், மாநிலத்தின் பிறபகுதிகளில் இரண்டு மணி நேரம் முதல் அதிகபட்சமாக 6 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. பெங்களூரை பொறுத்தளவில் சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதனால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. அதிலும், ஹெப்பால், எலகங்கா பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு பெங்களூரில் மின்வெட்டு அதிகம் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.