போதையில் தள்ளாடும் பெங்களூர் டானரி சாலை பற்றி தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உயிரை விடும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.
ஐ.டி. நகரமான பெங்களூரில் உள்ள டானரி சாலைக்கு சென்றால் தெருக்கள் குண்டும், குழியுமாக இருப்பதையும், குப்பைகள் குவிந்து கிடப்பதையும், வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற துடிக்கும் கடைகளையும் பார்க்க முடியும்.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பலருக்கும் தெரியாது. போதைப் பொருளுக்கு அடிமையாகி அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள டானரி சாலையைச் சேர்ந்த சைப் சாதிக் கூறுகையில்,
இந்த பகுதியில் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். கல்லறை முதல் இடிந்து கிடக்கும் பள்ளிக்கூட கட்டிடம் முதல் பல இடங்களில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு எல்லாம் மக்கள் போதையில் தள்ளாடுகிறார்கள் என்றார்.
பெங்களூரைச் சேர்ந்த என்.ஜி.ஓ. வான சங்கமா டானரி சாலை மற்றும் அதன் அருகில் உள்ள டி.ஜே. ஹள்ளியில் மட்டும் 534 பேர் போதைப் பொருள் பயன்படுத்துவதை கண்டுபிடித்துள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 1,500 பேர் போதைப் பொருள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இது பற்றி போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள பைஜு சத்யன் கூறுகையில்,
எங்களுக்கு போதைப் பொருள் பழக்கம் உள்ளது என்று தானாக முன்வந்து கூறியவர்கள் 534 பேர். வெளியே கூறாமல் போதைப் பொருள் பயன்படுத்துவோர் அதிகம். அவர்கள் தங்களைப் போன்று போதைப் பொருள் பயன்படுத்துவோரிடம் தான் தங்களின் பழக்கம் பற்றி தெரிவிப்பார்கள்.
நானும், சாதிக்கும் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க உதவி வருகிறோம் என்றார்.