விமானங்களுக்கு மிரட்டல், மனைவி கொலை.. பெங்களூர் கோகுலுக்கு போலீஸ் காவல்! தீவிர விசாரணைக்கு திட்டம்
பெங்களூர்: ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மற்றும் மனைவியை சிலையால் அடித்துக்கொன்றது ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பெங்களூர் தனியார் ஊழியரான கோகுலுக்கு செப்டம்பர் 21 வரை போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மேலும் பல கட்ட விசாரணைகளை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைது
டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற தனியார் ஊழியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை அம்பலம்
போலீசாரிடம் கோகுல் அளித்த வாக்குமூலத்தின்போது, தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என்று நாடகமாடிய தகவலும் அம்பலமாகிவிட்டது. திருச்சூரில் பள்ளி, கல்லூரி படித்த காலகட்டத்தில் கோகுலுக்கும், கரோலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கரோலின் மேற்படிப்புக்காக திருச்சிக்கும், கோகுல் டெல்லிக்கும் சென்றதால் இருவருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கள்ளத்தொடர்பு
இந்நிலையில், டெல்லியில் பழக்கமான அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்து பணிக்காக பெங்களூர் வந்தார் கோகுல். இத்தம்பதிக்கு 1 மகள் உள்ள நிலையில், அனுராதா வேலைபார்த்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவனோடு கள்ளக்காதலுக்கு ஆட்பட்டார். இதை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொண்டார் கோகுல்.
மீண்டும் காதல்
இந்நிலையில்தான், கோகுலுக்கு, கரோலின் தொடர்பு பேஸ்புக் மூலம் மீண்டும் கிடைத்துள்ளது. கரோலினுக்கு சாஜு ஜோஸ் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பதையும் அறிந்துகொண்டார். இதையடுத்து அனுராதாவை கொலை செய்துவிட்டு, சாஜு ஜோசை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைக்கு அனுப்பிவிட்டு கரோலினை அடைய திட்டமிட்டார் கோகுல். ஜூலை 28ம் தேதி அனுராதாவை வீட்டிலுள்ள சிலையால் அடித்து கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடியுள்ளார்.
போலீஸ் காவல்
விசாரணையில் கிடைத்த இந்த தகவலையடுத்து அனுராதாவின் மர்ம சாவு வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மற்றும், கொலை ஆகிய வழக்குகளில் கோகுல் சிக்கியுள்ளார். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கோகுலிடம் மேலும் விசாரிக்க கால அவகாசம் தேவை என்று காவல்துறை சார்பி்ல மனு வைக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி கோகுலை செப்டம்பர் 21ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தனர்.
ஆதாரம்
இந்த விசாரணையின்போது எச்எஸ்ஆர் லே-அவுட்டிலுள்ள கோகுலின் வீட்டுக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர். அப்போது, மனைவி அனுராதாவை கொலை செய்ய பயன்படுத்திய சிலையை ஆதாரத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.