பெங்களூரில், தமிழக ஐடி ஊழியர்களை குறி வைக்கும் டைபாய்ட் காய்ச்சல்! மலிவு விலை தடுப்பூசி ரெடி
பெங்களூர்: ஹோட்டல் உணவுகளை சாப்பிட்டு, ஹாஸ்டல்களில் தங்கியிருப்பதால் பெங்களூரில் வசிக்கும் ஐடி துறையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலருக்கும் டைபாய்ட் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இவர்களுக்கு சலுகை விலையில் தடுப்பூசி அளிக்க டாக்டர் ஒருவர் முன்வந்துள்ளார்.
சுகாதாரமற்ற தண்ணீர், சுற்றுச்சூழல் போன்றவற்றின் பின்னணியில் சமைக்கப்படும் ஹோட்டல் சாப்பாட்டையே பெங்களூரில் தங்கியிருக்கும் வெளிமாநில ஐடி ஊழியர்கள் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.
மே மாத தொடக்கத்தில் பெய்த மழை காரணமாக நகரில் டைபாய்ட் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இது ஐடி ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது. அதிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இத்துறையில் பணிபுரிவதால் அவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள்.
வெளி மாநிலம்
மணிப்பால் மருத்துவமனை டாக்டர் பங்கஜிடம் கேட்டபோது, வாரத்திற்கு இருவராவது டைபாயிடு காய்ச்சலோடு வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் என்று தெரிவித்தார்.
கால்வாசி இவர்கள்தான்
கொலம்பியா ஏசியா மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், அங்கு வரும் டைபாயிடு நோயாளிகளில் 25 சதவீதம்பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் என்று தெரிவித்தனர்.
சலுகை விலை
ஐடி ஊழியர்கள் நிலைமையை கருத்தில் கொண்டு, ஒயிட்பீல்டு பகுதியிலுள்ள டாக்டர் நீல்கந்த் கோட்டே என்பவர், சுமார் 10 ஆயிரம் ஐடி ஊழியர்களுக்கு சலுகை விலையில் டைபாய்ட் தடுப்பூசி போட ரெடியாகிவருகிறார்.
ஊசி போட ஒப்பந்தம்
அவரிடம் கேட்டபோது, "கார்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கட்டணம். நான் ரூ.300க்கு வழங்க உள்ளேன். ஐடி நிறுவனங்களோடு பேசியுள்ளேன்" என்றார்.