சைபர் குற்றம்: நகரங்களில் பெங்களூர் ஃப்ர்ஸ்ட், மாநிலங்களில் மகாராஷ்டிரா ஃப்ர்ஸ்ட்
பெங்களூர்: 2014ம் ஆண்டில் நாட்டில் உள்ள பெருநகரங்களில் பெங்களூரில் தான் சைபர் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டு நாட்டிலேயே அதிகமாக சைபர் குற்றங்கள் நடந்த பெருநகரம் பெங்களூர் ஆகும். கடந்த ஆண்டு நாட்டில் உள்ள 53 பெருநகரங்களில் அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடந்துள்ளது. அதில் பெங்களூரில் தான் அதிபட்சமாக ஐடி சட்டம் 2000ன் கீழ் 675 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரை அடுத்து ஹைதராபாத்தில் 386 வழக்குகளும், ஜெய்பூரில் 317 வழக்குகளும், லக்னோவில் 205 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா
கர்நாடகாவில் 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் கர்நாடகாவில் 1020 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
நாட்டிலேயே அதிகமாக சைபர் குற்ற வழக்குகள் பதிவான மாநிலம் மகாராஷ்டிரா தான். அங்கு கடந்த ஆண்டு 1, 879 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசம்
மகாராஷ்டிராவை அடுத்தபடியாக உத்தர பிரதேசத்தில் 1, 737 வழக்குகளும், கர்நாடகாவில் 1020 சைபர் குற்ற வழக்குகளும், தெலுங்கானாவில் 703 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
வடகிழக்கு மாநிலங்கள்
நாகாலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சைபர் குற்ற வழக்கும் பதிவாகவில்லை. ஆனால் திரிபுராவில் 5 வழக்குகளும், சிக்கிமில் 4 வழக்குகளும் பதிவாகியுள்ளது.
பெண்கள்
பதிவான வழக்குகளில் 90 சதவீதம் பெண்களை அசிங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும். பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து இமெயில், செல்போன் அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக அசிங்கமான மெசேஜ்கள் வருகிறது என்று சைபர் குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.