கர்நாடக பந்த்: பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பூட்டு போட்டதால் பயணிகள் பாதிப்பு
பெங்களூர்: மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தில், வட கர்நாடகத்தின் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மகதாயி நதியில் இருந்து 7.56 டிஎம்சி தண்ணீரை கலசா-பண்டூரி கால்வாய் வழியாக எடுத்துக்கொள்ள அனுமதி கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கர்நாடகத்தின் மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் கன்னட திரைப்படச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று, சனிக்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் பந்த் தொடங்கியது. மாலை 6 மணி வரை பந்த் தொடர்ந்தது..
பந்த்துக்கு அரசே மறைமுக ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டதால், கர்நாடக அரசு பஸ்கள் இயங்கவில்லை. பெங்களூரில் சிட்டி பஸ்களும் இயங்கவில்லை. ஆட்டோக்கள், கால் டாக்சிகளும் இயங்கவில்லை.
பெங்களூர் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என நேற்று அதன் மேலாண் இயக்குநர் பிரதீப் கரோலா நேற்று அறிவித்திருந்தார். மக்கள் நலனுக்காக கூடுதல் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும் என்றார்.
ஆனால் இன்று காலையிலேயே கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர். எனவே மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டது. இதனால் எந்த வகை போக்குவரத்து சாதனமும் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். மாலை 6 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்கியது.