ரயில்வே அமைச்சராவேன் என கனவிலும் நினைக்கவில்லை...: சதானந்த கவுடா
மைசூர்: ரயில்வே அமைச்சராவேன் என கனவிலும் நினைக்கவில்லை என மத்திய ரயில்வே அமைச்சரான சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சராக பொறுபேற்ற பின்னர் முதன்முறையாக நேற்று கர்நாடக மாநிலம் மைசூருக்கு வந்திருந்தார் சதானந்தகவுடா. பெங்களூரிலிருந்து மாண்டியா வரை காரில் வந்த சதானந்தா, அதைத்தொடர்ந்து கோல்கும்பா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏழை மக்களுடன், மக்களாக சாதாரண பெட்டியில் பயணம் செய்து மைசூர் வந்தடைந்தார்.
ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பிடம், பயணிகள் தங்கும் அறை, உணவு பொருள் விற்பனை கடைகள் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்த சதானந்தா, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
வேகத்திறன் அதிகரிப்பு...
மைசூரில் இருந்து பெங்களூருக்கு தற்போது ரயிலில் பயணம் செய்வதற்கு 3 மணி நேரம் ஆகிறது. இந்த பயண நேரத்தை 1½ மணி நேரமாக குறைக்கும் வகையில் ரயில்களின் வேகத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓராண்டுக்குள்...
பெங்களூரில் இருந்து மைசூர் வரை இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூர் முதல் மண்டியா வரை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இன்னும் ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை....
நான் மைசூர் பகுதியை நன்கு அறிந்தவன் என்பதால் இங்குள்ள ரயில் நிலையங்களில் வளர்ச்சி குறித்து அவசியம் நடவடிக்கை எடுப்பேன். நான் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் மைசூருக்கு அதிக நிதியை வழங்கி உள்ளேன.
பயனுள்ள பட்ஜெட்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் அமைந்துள்ள ஆட்சியின் முதல் ரயில்வே பட்ஜெட்டை மக்களுக்கு பயனுள்ளதாக கொடுத்துள்ளேன்.
மக்கள் ஒத்துழைப்பு...
நான் ரயில்வே அமைச்சராவேன் ஆவேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் தற்போது மத்திய அமைச்சராகி உள்ளேன். மக்கள் அனைவரும் எனக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் மக்களுக்கான சேவைகள் செய்ய தொடர்ந்து பாடுபடுவேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடனிருந்தோர்...
பேட்டியின் போது மைசூர் மாவட்ட கலெக்டர் பாலய்யா, மைசூர் ரெயில்வே மண்டல மேலாளர் ராஜ்குமார் லால், பிரதாப் சிம்ஹா எம்.பி., மைசூர் மாவட்ட உணவுத்துறை இயக்குனர் ராமேசுவரப்பா, மற்றும் பா.ஜனதா கட்சி பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.