பெங்களூரின் பிசியான சாலையில் மனிதனின் கையை குதறியபடி கிடந்த அனகொண்டா
பெங்களூர்: பெங்களூரில் சாலையோரம் கிடந்த அனகொண்டா பாம்பை பார்த்து மக்கள் பீதி அடைந்தனர்.
பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு மட்டும் அல்ல குண்டு குழிகளுக்கும் குறைவே இல்லை. இந்நிலையில் பெங்களூரின் மேம்பாட்டுக்காக பாடுபடும் நம்ம பெங்களூர் பவுன்டேஷன் என்ற அமைப்பு தெருக்களில் உள்ள குழிகளை அடைக்க முயற்சி செய்யாத மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க நினைத்தது.
After Crocodile now an Anaconda Spotted on Bengaluru's water-filled potholes. This was done to draw BBMP attention. pic.twitter.com/Na7Htj766p
— Traffline Delhi/NCR (@TrafflineDEL) August 11, 2015
இதையடுத்து அனகொண்டா பாம்பு ஒன்றை செய்து அதை பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூரில் இருக்கும் தெரு ஒன்றில் போட்டது. பெரிய குழியில் இருந்து அனகொண்டா பாம்பு தலையை நீட்டுவது போன்று இருந்தது. பாம்பின் வாயில் மனித கை ரத்தக்கறையுடன் இருந்தது.
நடுத்தெருவில் அனகொண்டா பாம்பு மனிதனின் கையை கடித்துக் குதறியது போன்று கிடந்ததை பார்த்த மக்கள் முதலில் பீதி அடைந்தனர். பெங்களூரில் அதிகரித்து வரும் குண்டு குழி பிரச்சனை, நோய்கள், தண்ணீர்தேக்கம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவே இந்த வித்தியாசமான முயற்சி.
அந்த பாம்பை செய்ய இரண்டு நாட்களானதாம். முன்னதாக பெங்களூரில் உள்ள சாலை ஒன்றில் இருந்த பெரிய குழியை மாநகராட்சியினர் அடைக்க வேண்டி நஞ்சுண்டசாமி என்பவர் முதலையை செய்து சாலையில் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிராப்லைன் டெல்லி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
முதலையை அடுத்து பெங்களூரின் தண்ணீர் நிறைந்த குழியில் அனகொண்டா. பிபிஎம்பியின் கவனத்தை ஈர்க்க செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.