மாணவி பலாத்காரம்: பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு பரிந்துரை!
பெங்களூரு: பெங்களூருவில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியை, கடந்த 12-ந் தேதி பள்ளி வளாகத்தில் நேகாவுக்கு உடற்கல்வி ஆசிரியரும், காவலாளியும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த 4 நாட்களாக, அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட 40 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் பெற்றோர் உறுதியாக கூறி விட்டனர்.
கறுப்பு உடையோடு
சனிக்கிழமையன்று பள்ளிக்கூடத்தின் முன்பு போராட்டமும், மவுன ஊர்வலமும் நடத்தப்பட்டது. இதையொட்டி, அந்த தனியார் பள்ளிக்கூடத்தின் முன்பு திரண்ட பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து திரண்டு வந்தனர்.
மவுன ஊர்வலம்
பின்னர் அவர்கள் பள்ளியில் இருந்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றார்கள். பலாத்கார குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கும், சிறுமிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மவுனமாக சென்றார்கள்.
போலீசுக்கு எதிராக முழக்கம்
போலீஸ் நிலையத்தை வந்தடைந்ததும், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென்று ஒன்று திரண்டு போலீசை கண்டித்து கோஷம் எழுப்பினர். உடனே போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவுராத்கர் அங்கு விரைந்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
வாக்குவாதம்
இதை ஏற்க மறுத்து போராட்டக்காரர்கள் போலீஸ் கமிஷனர் ராகவேந்திராவை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். நீதி வேண்டும் என்று கோரி போலீஸ் கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் போலீஸ் கமிஷனர் திணறினார்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மற்ற போலீசார், அவரை போராட்டக்காரர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.
ஆன்லைன் மூலம் பிரச்சாரம்
சிறுமி பலாத்கார போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யாததால் போராட்டக்காரர்கள் ‘ஆன்-லைன்' இணைய தளம் மூலம் போலீசுக்கும், பள்ளிக்கும் எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் ஆன்-லைன் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அங்கீகாரம் ரத்து
இதற்கிடையே பெங்களூரில் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு இந்திய பள்ளிகள் தேர்வு வாரியக் கவுன்சிலுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அங்கு படிக்கும் மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.