அணைகளில் தண்ணீர் இல்லை.. கோடைக்கு முன்பே பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு, பவர்-கட்!
பெங்களூர்: போதிய மழை இல்லாத காரணத்தால் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டதால், பெங்களூர் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்து ஆடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பெங்களூர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் பிடிப்பு பகுதி திப்பகொண்டனஹள்ளி (டி.கே.ஹள்ளி) ஏரியாகும். இந்த ஏரியில் இருந்து தினமும் 1350 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் பெங்களூருக்கு பம்ப் செய்யப்படுகிறது.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி போன்ற அணைகளில் இருந்து வரும் தண்ணீரும், மழையால் கிடைக்கும் நீரும், டி.கே.ஹள்ளி ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாகும்.
ஆனால், இந்த வருடம், கர்நாடகாவில் போதிய மழை இல்லாத காரணத்தால், கே.ஆர்.எஸ், கபினி அணைக்கட்டில் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டது. கேஆர்எஸ் அணையில் 49.45 டிஎம்சி தண்ணீர் சேகரித்து வைக்க முடியும்., தற்போது அந்த அணையின் நீர்மட்டம் 18.27 டிஎம்எசியாக மட்டுமே உள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் கேஆர்எஸ் அணையில் 31.72 டிஎம்சி தண்ணீர் இருந்தது. போலவே 19.52 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கபினி அணையில், தற்போது, 9.24 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த அணையில் 15.05 டிஎம்சி தண்ணீர் இருந்தது. இரு அணைகளிலும், கடந்த ஆண்டை ஒப்பிட்டால், முறையே, 48 மற்றும் 38 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு குறைந்துள்ளது.
இதனால் பெங்களூருக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கு குடிநீர் வந்த நிலை மாறி, தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறைதான் நீர் வருகிறது. அதுவும், குறைந்த அளவுக்கே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் குடிநீருக்கு பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர் பெங்களூர் மக்கள்.
அணைகளில் நீர் இல்லாமல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தினமும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டிலும் சிக்கி தவிக்கிறார்கள் பெங்களூர் நகர மக்கள். பெரிய மழை ஒன்று பெய்தால், ஓரளவுக்கு தப்பிக்க வாய்ப்பிருப்பதாக கைவிரிக்கிறார்கள் அதிகாரிகள். மேலும் டி.கே.ஹள்ளி ஏரியில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் நீரை தடுத்தால்தான் குடிநீருக்கு சப்ளை செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.