பெங்களூரை உலுக்கும் 'வாடகை தாய்' மோசடி! தம்பதிகளை ஏமாற்றிய பிரபல டாக்டர் கைது
பெங்களூர்: வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக தம்பதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, கடத்தி வரப்பட்ட குழந்தைகளை அவர்களுக்கு அளித்த பிரபல மருத்துவமனை டாக்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் பசவேஸ்வரநகர் முதலாவது ஸ்டேஜ் பகுதியில் தலைமையிடத்தை கொண்டுள்ளது, ஸ்ருதி குளோபல் மெடிகேர் மற்றும் ரிசர்ச் சென்டர் (Shrushti Global Medicare and Research Center). பெங்களூரின் பல பகுதிகளிலும் இந்த மருத்துவமனைக்கு கிளைகள் உள்ளன.
குழந்தையில்லாத பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்வதாகவும், வாடகை தாய் மூலமாக குழந்தை பிறப்பிக்க செய்து தருவதாகவும் கூறி இந்த மருத்துவமனை செய்யும் விளம்பரங்கள் பெங்களூர்வாசிகளுக்கு மிகவும் பரிட்சையம்.
குழந்தைக்கு ரூ.3.5 லட்சம்
இந்த மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் கே.டி.குருமூர்த்தி நூதன முறையில் குழந்தையில்லாத தம்பதிகளை ஏமாற்றி வந்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2008ம் ஆண்டு குருமூர்த்தியை அணுகிய, டான்பாஸ்கோ என்ற தொழிலதிபரும் அவரது மனைவி சரளாதேவியும், வாடகை தாய் மூலமாக தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு ஓ.கே சொன்ன குருமூர்த்தியும், ரூ.3.5 லட்சம் பணத்தை கட்டணமாக வாங்கியுள்ளார்.
வாரிசு அமோகமா வளருது
டான்பாஸ்கோவின் விந்தணு சாம்பிளையும் வாங்கிக்கொண்டார் குருமூர்த்தி. வாடகை தாய் யார் என்பதை தம்பதிகளுக்கு தெரிவிக்க கூடாது என்ற விதிமுறையை சாதகமாக்கிக் கொண்ட குருமூர்த்தி, உங்கள் வாரிசு ஒரு பெண்ணின் வயிற்றில் வளரத் தொடங்கியுள்ளது என்று டான்பாஸ்கோவிடம் 'கப்சா' விட்டுள்ளார்.
குறைப் பிரசவத்துக்கு பிறந்திருப்பாரோ?
ஆனால் விந்தணுவை பெற்ற 7வது மாதத்திலேயே உங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று டான்பாஸ்கோவிடம் குருமூர்த்தி கூறியுள்ளார். ஒருவேளை மாதக் கணக்கை மறந்துவிட்டார் போலும். ஆனால் டான்பாஸ்கோ தம்பதியோ, அய்யய்யோ... 7 மாதத்திலேயே குழந்தை பிறந்தால் அது குறைபிரசவமாயிற்றே என்று பதறியுள்ளனர் அப்பாவிகளாய்.
சொன்னா கேப்பீங்கல்ல
ஆனால் குருமூர்த்தி, டான் பாஸ்கோவிடம் கொடுத்த குழந்தையோ 10 மாதம் நிரம்பிய குழந்தையைப்போலவே தலையில் முடியுடன், முழு வளர்ச்சியுடன் இருந்துள்ளது. எனவே டான்பாஸ்கோ சந்தேகப்பட்டு குருமூர்த்தியிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அவரோ, ஒப்பந்தப்படி பணத்தை வாபஸ் தர முடியாது. நான் சொல்வதைக் கேளுங்கள்.. இது உங்கள் குழந்தைதான் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
டிஎன்ஏ சோதனை
சில ஆண்டுகள் அந்த பெண் குழந்தையை டான்பாஸ்கோ தம்பதி வளர்த்துவந்த நிலையில், அந்த சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிக்கு சந்தேகம் மேலும் வளர்த்தது. ஆனால் வெளியிலும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தபடி வாழ்க்கையை நகர்த்தினர். இந்த வேதனையில் டான்பாஸ்கோ மனைவி சரளாதேவி திடீரென உயிரிழந்துவிட்டார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று நினைத்த டான் பாஸ்கோ, குழந்தையின் டிஎன்ஏவை சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போதுதான் அந்த குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என்பது தெரியவந்தது.
பல பேரிடம் மோசடி
இதையடுத்து டிஎன்ஏ சோதனையை ஆதாரமாக கொண்டு டான் பாஸ்கோ அளித்த புகாரின் பேரில் கே.டி.குருமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து அறிந்ததும், அவரிடம் வாடகை தாய் மூலமாக குழந்தைகளை வாங்கிய பல தம்பதிகளும் காவல் நிலையத்திற்கு அணி வகுத்துள்ளனர்.
அடப்பாவமே
வாடகை தாய் மூலமாக குழந்தை வேண்டும் என்று கேட்டு வரும் ஆண்களிடம் விந்தணு சாம்பிளை வாங்கும் குருமூர்த்தி, அதை எங்கோ குப்பை தொட்டியில் எறிந்துவிட்டு, அநாதை குழந்தைகளை வாங்கி அல்லது கடத்தி வந்து அதை உங்கள் குழந்தை என்று கூறி கொடுத்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் கிடுக்கிப்பிடி
இதையடுத்து நகர குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், குருமூர்த்திக்கு எதிராக வரும் புகார்களை புறம் தள்ளாமல் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
40 புகார்கள் குவிந்துள்ளன
பாதிக்கப்பட்ட தம்பதிகள் தரும் புகாரை எந்த காவல் நிலையத்திலாவது ஏற்க மறுத்தால் அதுகுறித்து தெரிவிக்க 94808 01011 என்ற தனது செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஹேமந்த் நிம்பால்கர் கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறையின் கெடுபிடிக்கு பிறகு குருமூர்த்தியின் மோசடிக்கு எதிராக சுமார் 40 புகார்கள் பதிவாகியுள்ளன.