பெங்களூருவில் இனி பறக்கலாம்... ஹெலிகாப்டர் டாக்ஸி சர்வீஸ் அறிமுகம்
பெங்களூருவில் நாட்டிலேயே முதன்முறையாக ஹெலிகாப்டர் டாக்ஸி சர்வீஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெங்களூரு : போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நகரத்திற்கு வர ஹெலிகாப்டர் டாக்ஸி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நவம்பர் 2017ஆம் ஆண்டு முதல் ஹெலிகாப்டர் டாக்ஸியில் பெங்களூருவாசிகள் பறக்கலாம்.
பெங்களூரு போன்ற எல்க்ட்ரானிக்ஸ் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக்கொண்டே போகிறது. நகரத்திலிருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்குள் மூச்சுத் திணறிவிடுகிறது. அவசரமாக விமானப் பயணத்திற்கு செல்வது கடினமான காரியமாக இருக்கிறது.
வேலை நேரங்களில் விமான நிலையத்திற்கு காரில் செல்லவே மூன்று மணிநேரம் ஆகிறது. ஏசி காரில் விமான நிலையத்திற்கு செல்ல ரூ. 1500 முதல் ரூ. 2500 வரை வாடகை கேட்கிறார்கள்.
இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கஷ்டங்களுக்கு விரைவில் பெங்களூரு விடுதலை பெறும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வாடகை ஹெலிகாப்டர் சர்வீஸ் இயக்கப்பட இருக்கிறது.
முதல்முறை
நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூருவில்தான் இந்த சர்வீஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. தும்பி ஏவியேஷன் நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது.
5 ஆயிரம் அடியில் பறக்கும்
மத்திய சிவில் ஏவியேஷன் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். அரசு ஓபன் ஸ்கை பாலிசி திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர்கள் 5 ஆயிரம் அடியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
15 நிமிடத்தில் செல்லலாம்
நகரிலிருந்து விமான நிலையத்துக்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில் சர்வீஸ் இருக்கும் என்றும் தும்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் வாடகைக் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
90 ஹெலிபேடுகள்
13 இருக்கைகள் கொண்ட பெல் 412, 5 இருக்கைகள் கொண்ட பெல் 407 ஹெலிகாப்டர்கள் டாக்ஸிகளாக செயல்படஉள்ளன. பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மீது ஹெலிகாப்டர் இறங்குதளங்களை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 90 ஹெலிபேடுகளை
அமைத்து ஹெலி டாக்சிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.