பெங்களூரை நோக்கி நகர்ந்து வரும் நாடா.. குளிரோடு மழையும் சேர்ந்ததால் மக்கள் 'நடுக்கம்'
தமிழக கரையை கடந்த நாடா காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்களூரை நோக்கி பயணிக்கிறது. எனவே இந்த நகரத்தில் விடிய விடிய மழை பெய்தது.
பெங்களூர்: நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தநிலையில் அதன் தாக்கத்தால் பெங்களூரிலும் விடிய விடிய மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான நாடா புயல், காரைக்கால் அருகே இன்று காலை கரையை கடந்தது. இந்த காற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. அதாவது, தருமபுரி, கிருஷ்ணகிரி, தென் கர்நாடக மாவட்டங்களை இந்த காற்று ஊடுருவி செல்ல உள்ளது. நாடாவின் தாக்கம் பெங்களூரில் நேற்று இரவே தொடங்கிவிட்டது. நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை சற்று ஓய்ந்து, மீண்டும் இரவு கொட்டியது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் சாரல் மழையாகவும் இது பதிவானது. இதேபோல மைசூரிலும் மழை பதிவானது. ஓசூர் நகரிலும் மழை பதிவானது.
ஏற்கனவே டிசம்பர் மாத கடும் குளிரில் அவதிப்பட்ட, பெங்களூர், ஒசூர் நகர மக்களுக்கு இந்த மழையால் கூடுதல் நடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் வெகு நாட்களுக்கு பிறகு வந்த மழை என்பதால் மகிழ்ச்சியடைந்தோரும் உண்டு.
ஈரப்பதமான, குளிர்மிகு வானிலையால் சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகளுடன் அதிகம் பேர் மருத்துவமனைகளை அணுகியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிலும், குழந்தைகள், முதியவர்களுக்கு அதிக பாதிப்பு இருந்துள்ளது. அதேபோல, பெங்களூரில் மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.