வன்முறையால் பஸ் இல்லை.. பல கிலோமீட்டர் நடந்தே ஓசூருக்கு வந்த பெங்களூர் மணமகள்!
கிருஷ்ணகிரி: பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கு பஸ் எதுவும் இல்லாததால், தனது கல்யாணத்திற்கு போவதற்காக நடந்தே ஓசூருக்கு வந்துள்ளார் ஒரு புதுமணப்பெண். இவருக்கு நாளை வானியம்பாடியில் திருமணம் நடைபெறவுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் 25 வயதான பிரேமா. இவருக்கும் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாளை திருமணம் நடைபெறவுள்ளது.
ஆனால் தற்போது காவிரிப் பிரச்சினை காரணமாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால், பெங்களூலிருந்து தனது குடும்பத்தினருடன் தமிழகம் வருவதற்கு பிரேமா பெரும் சிரமப்பட்டு விட்டார்.
தனது வீட்டிலிருந்து கிடைத்த பஸ், ஆட்டோவில் ஏறி குறிப்பிட்ட தூரம் வரை அவர்கள் வந்து விட்டனர். அதன் பின்னர் நடந்துதான் போக முடியும் என்ற நிலை இதனால் பிரேமாவும், அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் நடந்தே ஓசூர் வந்தனர்.
இங்கிருந்து அவர்கள் வாணியம்பாடிக்கு பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து பிரேமா வருத்தத்துடன் கூறுகையில், "இந்தப் போராட்டம் எனது சந்தோஷத்தையெல்லாம் பறித்து விட்டது. மிகவும் வேதனையாக இருக்கிறது. வாழ்நாளில் இதை நான் மறக்க மாட்டேன்.
நாம் எல்லோரும் இந்தியர்கள், இந்தியா ஒரே நாடு. முதலில் அனைவரும் இதை உணர வேண்டும் என்றார்.மணமகள் போன்ற மேக்கப்புடன் பிரேமா நடந்து வந்த காட்சியை அங்கிருந்தவர்கள்
வியப்புடம் பார்த்துள்ளனர். ஆனபோதும் கலவரம் நடந்த சில பகுதிகளை பீதியுடன் தான் பிரேமாவும், அவரது உறவினர்களும் கடந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.