ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- தீர்ப்பு தேதி செப். 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு! நீதிமன்றமும் இடமாற்றம்!!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகால இழுத்தடிப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்து வரும் 20-ந் தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அறிவித்திருந்தார்.
ஜெ. புதிய மனு
இந்த நிலையில் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் நேற்று ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்து குவிப்பு வழக்கில் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு
தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். தற்போது வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பரப்பன அக்ரஹாரத்துக்கு நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.
நீதிமன்றம் மாற்றம்
அதேபோல் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று நீதிமன்றத்தை பார்ப்பன அக்ரகாரத்துக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு
இம்மனு மீது இன்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா விசாரணை நடத்தினார். இன்றைய விசாரணையின் முடிவில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 20-ந் தேதிக்கு பதிலாக 27-ந் தேதிக்கு வழங்கப்படும். மேலும் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்கும் நாளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பரப்பன அக்ரஹாரத்துக்கு தற்காலிகமாக நீதிமன்றம் மாற்றப்படும் என்று அறிவித்தார்.