ஓராண்டில் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள்.. ரூ20 ஆயிரம் கோடி டெபாசிட்..: பிரதமர் மோடி
டெல்லி: மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ20 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றியதாவது:
இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்தியாவின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் பண்பு உலகமெகுங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒற்றுமை ஓங்கி வளர்ந்துள்ளது. இந்திய தேசத்தில் சாதி, மதவாதத்துக்கு இடமில்லை.
இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சி. இந்தியா ஒரு குழுவாக செயல்படுகிறது.
இந்தியா மேலும் வளர்ச்சி காணும் வகையில் புதியதொரு நம்பிக்கை சூழல் உருவாகியுள்ளது. இத்தேசத்தில் யாரும் ஏழையாக இருக்க விரும்பவில்லை.
ஏழைகள் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவே விரும்புகின்றனர். எனவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலேயே அனைத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. வங்கிகள் பணக்காரர்களுக்கானதாகவே மட்டுமே இருந்தது.
17 கோடி மக்கள்...ரூ20ஆயிரம் கோடி டெபாசிட்
அதை முடிவுக்கு கொண்டு வந்தோம். ஏழை மக்களுக்காக ஜன் தன் திட்டத்தை துவக்கினோ,. 17 கோடி மக்கள் இத்திட்டம் மூலம் வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளனர். ஏழை மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளில் ரூ.20,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டம்
கடந்த முறை நான் சுதந்திர தின உரையாற்றியபோது கழிப்பறைகள் பற்றியும் சுகாதாரம் பற்றியும் பேசினேன். ஆனால் இவர் என்ன மாதிரியான பிரதமர், எங்கு எதை பேசுகிறார் என விமர்சிக்கப்பட்டேன். ஆனால், இன்று தூய்மை இந்தியா உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மக்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல உதவிய ஆன்மிக தலைவர்கள், ஊடக நண்பர்கள் என அனைவரும் பங்களித்தனர். தூய்மை இந்தியா திட்டம் குழந்தைகள் மத்தியில் சென்றடைந்துள்ளது.
ஊழல்... கருப்புப் பணம்
கருப்புப் பண பதுக்கலை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் சிலர் அச்சமடைந்துள்ளனர். கருப்புப் பண தடுப்புச் சட்டம் நாட்டில் இருந்து பணத்தை வெளியே எடுத்துச் சென்று பதுக்க நினைப்பவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய தேசம் ஊழலற்ற தேசமாக உருவாகலாம். ஆனால் அதற்கு நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
அமைச்சக பெயர் மாற்றம்
விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டியது மிக அவசியமனாது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களும் சரி சமமாக வளர்ச்சி காண வேண்டும். வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை விலக்கி வைத்துவிட்டு இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது.
வேளாண் அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த அமைச்சகம் வேளாண், விவசாயிகள் நலத் துறை என அழைக்கப்படும். விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டியது மிக அவசியமனாது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மத்திய வேளாண் அமைச்சகம் இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் என அழைக்கப்படும். வேளாண் வளர்ச்சியிலிருந்து விவசாயிகள் நலனை பிரிக்க முடியாது.
மின்வசதி
அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே ரேங்க் ஒரே பென்சன்
ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசுகளும் இத்திட்டம் பற்றி பேசியிருக்கின்றன. ஆனால், பாஜக அரசு மட்டுமே இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று இந்த மூவர்ணக் கொடியின் கீழ் நின்று கொண்டு சொல்கிறேன். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சிறு சிக்கல்களைக் களைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேச்சுவார்த்தை செல்லும் திசை நிச்சயம் நேர்மறை முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.