நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்! 3 நாட்கள் வங்கி சேவையில் பாதிப்பு
டெல்லி: ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 5 கிளை வங்கிகளின் விதிமீறலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், நாளையும், நாளை மறுதினம் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளதாவது: வங்கித்துறையில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வு பணி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், ‘ஸ்டேட் பாங்க் ஆப்' இந்தியாவின் கிளை வங்கிகளான ‘ஸ்டேட் பாங்க் ஆப்' திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஹைதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் தன்னிச்சையாக ஒப்பந்ததை மதிக்காமல் மீறி செயல்படுகிறது.
இதனால் வேலைப்பளு அதிகரிப்பு, கூடுதல் நேரம் பணி ஒதுக்கீடு, கட்டாய இட மாற்றம், நிரந்தர பணிகளும் ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்குதல் போன்ற பல பிரச்சினைகளை குறிப்பிட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர்.
மத்திய தொழிலாளர் ஆணையர் வங்கி நிர்வாகத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்த மீறலை கைவிட வேண்டும் கேட்டுக்கொண்டார். எனினும் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து திட்டமிட்டப்படி ஜனவரி 8ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. வங்கிகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். அதிகாரிகள் மட்டும் வருவார்கள். ஆனால், பண பரிவர்த்தனைகள், காசோலை பரிமாற்றம் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார். நாளை 2வது சனிக்கிழமை, அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்களுக்கு வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.
இதனிடையே தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ள இந்த நேரத்தில், வங்கிகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளது வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.