இப்படியா பேசுவது.. வங்கி ஊழியர்களிடம் வாங்கிக் கட்டிய சந்திரபாபு நாயுடு
ரூபாய் நோட்டு பிரச்சினை தீராததற்கு வங்கி ஊழியர்கள் அலட்சியமே காரணம் என்று கூறியதற்கு சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஹைதராபாத்: ரூபாய் நோட்டு திரும்பப் பெற்ற விவகாரம் நீடித்து வருவதற்கு காரணம் வங்கி ஊழியர்களின் அலட்சியம் என்று கூறிய ஆந்திர முதலமைச்ச் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வங்கி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
கடும் அதிருப்தி:
அப்போது, பேசிய சந்திரபாபு நாயுடு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தார். ரூபாய் நோட்டு பிரச்சினை தீராததற்கு வங்கி ஊழியர்கள் அலட்சியமே காரணம். அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கடுமையாக சாடினார். அவரது இந்த பேச்சு வங்கி ஊழியர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சந்திரபாபு நாயுடு பகிரங்மாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆந்திர வங்கிகளின் கூட்டமைப்பு தலைவர் ராம்பாபு கூறியதாவது:- கடந்த 9-ந்தேதி முதல் நாங்கள் விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு எங்களது தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
பலிகடா ஆக்க பார்க்காதீர்கள்:
மத்திய அரசு கொண்டு வந்த இத்திட்டத்தில் மாநில அரசு ஏதாவது செய்ததா? வங்கியில் காத்திருந்த மக்களுக்கு குடிநீர், மோர் கொடுத்தார்களா? எங்கள் மீது குற்றம் சாட்டுவது என்ன நியாயம்? நாங்கள் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். இப்பிரச்சினையில் வங்கி ஊழியர்களை பலிகடா ஆக்க பார்க்காதீர்கள்.
இந்த விவகாரத்தில் ஆந்தி முதலமைச்சர் சந்திரபாபு நாடுயு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ராம்பாபு. ஆனால் வங்கி ஊழியர்களின் புகாருக்கு சந்திரபாபு நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வங்கி ஊழியர்கள் மீது நான் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்றுதான் தெரிவித்தேன் என்றார்.