நாடு முழுக்க அடுத்தடுத்து மூடப்படும் ஏடிஎம்கள்.. மக்களுக்கு ஆப்பு ரெடி!
பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல்மயத்துக்கு மாறி வருவதால் 358 ஏடிஎம்கள் மூடப்பட்டு விட்டன.
டெல்லி: பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல்மயத்துக்கு மாறி வருவதால் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை 358 ஏடிஎம்களை சில வங்கிகள் மூடிவிட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பை கொண்டு வந்தது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பணமதிப்பிழப்பாலும், வங்கி ஏடிஎம்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு அபராதம் விதிப்பதாலும் பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல்மயத்துக்கு மாறிவிட்டன. இதனால் ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்துவிட்டதால் வங்கிகளுக்கு கடினமாக இருந்தன.
இதனால் நாட்டில் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்கை கொண்ட பாரத ஸ்டேட் வங்கி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை 59,291-லிருந்து 59,200-ஆக குறைத்தன. அதேபோல் பஞ்சாப் தேசிய வங்கியும் 10502-லிருந்து 10083 ஏடிஎம்களாக குறைத்துவிட்டன.
அதேபோல் எச்டிஎஃப்சி வங்கியும் 12,230 ஏடிஎம்களிலிருந்து 12,225-ஆக குறைத்துவிட்டன. விமான நிலையங்கள் மற்றும் மும்பையின் முக்கிய இடங்களில் உள்ள 35 சதுர அடி இடம் கொண்ட ஏடிஎம் மையங்களின் வாடகை மாதத்துக்கு ரூ.40 ஆயிரம் உள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மெட்ரோபாலிட்டன் நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரில் ஏடிஎம்களுக்கான மாத வாடகை ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. மேலும் ஏடிஎம் மையங்களுக்கான பாதுகாவலர், பராமரிப்பு செலவு, மின் கட்டணம் என மொத்தமாக மாதத்துக்கு ரூ.30,000-லிருந்து ரூ.1 லட்சம் வரை ஆகிறதாம்.
இதனால் ஒரு வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பக்கத்தில் அதே வங்கி அல்லது அந்த வங்கியுடன் தொடர்புடைய மற்றொரு வங்கிகளின் ஏடிஎம் இருந்தால் ஒன்றை மூடுவது என்ற முடிவுக்கு வங்கிகள் வந்துவிட்டன. அதன்படி மொத்தம் 358 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.