நாட்டில் ஏகப்பட்ட மல்லையாக்கள்.. வங்கிகளுக்கு ரூ.17ஆயிரம் கோடி நஷ்டம்
இந்திய வங்கிகளுக்கு தொடர் மோசடி சம்பவங்களால் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: கடந்த நிதியாண்டில் பல்வேறு மோசடி, முறைகேடுகள், வங்கி கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களால் இந்திய வங்கிகள் சுமார் 17 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா, ஆர்பிஐ அளித்த தகவலின் படி 2016 -2017ம் நிதியாண்டில் 16 ஆயிரத்து 789 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். வங்கி கடனை செலுத்தாதது, தவறான கணக்குகள், மோசடி கணக்குகள், முறைகேடுகள் உள்ளிட்டவைகளால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் வங்கிக்கொள்ளை, திருட்டு, ஏடிஎம் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இணைய வழியாக பண பரிமாற்றத்தில் தவறுகள் நிகழ்வதால், அவற்றை சீர்செய்ய தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு முறையான கணக்குகள் வைக்கவும், தவறான நபர்களுக்கு வங்கிக்கடன்களை அளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை விடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.