பார்வேர்ட் பிளாக் கட்சியில் அரசியல் ஆரம்பித்து, காங்கிரசில் பயணித்து, பாஜகவில் ஐக்கியமான பன்வாரிலால்
மேகாலயா கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேகாலயா கவர்னராக பதவி வகித்தவர் ஆவார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யா ஓய்வு பெற்றப் பின் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் ஆளுநர் பதவி காலியாகி ஓராண்டு ஆகியும் முழு நேர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
குடியரசுத் தலைவர் அறிவிப்பு
இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
மேகாலயா ஆளுநர்
பன்வாரிலால் புரோஹித் 2016ல் அசாம் ஆளுநராகவும், 2017ல் மேகாலயா ஆளுநராகவும் பதவி வகித்தவர் ஆவார். பன்வாரிலால் 3 முறை லோக் சபா எம்பியாக இருந்துள்ளார்.
நாக்பூரிலிருந்து தேர்வு
காங்கிரஸ் சார்பில் 2 முறையும் பாஜக சார்பில் ஒரு முறையும் லோக் சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 3 முறையும் நாக்பூரிலிருந்தே தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் பிறந்தவர்
பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பிறந்தார்.
முழுநேர ஆளுநர்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூலம் அரசியலில் அறிமுகமானார் பன்வாரிலால். 77 வயது மூத்த அரசியல்வாதியான பன்வாரிலால் இனி தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பதவி வகிப்பார்.