நரசிம்மா ராவால் முடியாததை சாதித்த பிரதமர் மோடி!
டெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவால் செய்ய முடியாத காரியத்தை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.
பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கையில் 1995ம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வைக்க விரும்பினார். ஆனால் அது நடக்காமல் போனது.
இது குறித்து ராவ் நிர்வாகத்தில் பணியாற்றிய முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு அதிபர் கிளிண்டனின் நடவடிக்கைகள் மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து அவரை 1995ம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அழைக்குமாறு என்னிடம் தெரிவித்தார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகத் தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.
ஆனால் நான் அமெரிக்காவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்ட்ரோப் டால்பாட்டை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தேன். அவர் 20 முதல் 36 மணிநேரத்திற்குள் என்னை தொடர்பு கொண்டு அழைப்பைக் கேட்டு கிளிண்டன் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் வருடாந்திர கூட்டம் ஜனவரியில் நடப்பதால் கிளிண்டனால் இந்தியா வர முடியாது என்று தெரிவித்தார் என்றார்.