‘செனோரிட்டா... நான் பேசுறது புரியுதா...?’ அசர வைத்த ஒபாமாஜி!
டெல்லி: அமெரிக்காவுக்குத் திரும்பிப் போவதற்குள் ஒபாமா பெரிய இந்தி பண்டிட் ஆகி விடுவாரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு தனது இந்தி ஆர்வத்தை இந்தியப் பயணத்தின்போது கிடைத்த சந்தர்பத்தில் எல்லாம் பயன்படுத்த அவர் தவறவில்லை.
இந்தி, இந்தியக் கலாச்சாரம், பாலிவட் என இந்திய மயமான பேச்சாகவே ஒபாமாவின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
2010ம் ஆண்டு இந்தியாவுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிஷலும் வந்திருந்தபோது பாலிவுட் பாட்டுக்கு டான்ஸ் ஆடி அனைவரையும் அசத்தினர். இந்த முறை இந்தியில் பேசவும் செய்தார் ஒபாமா.
இன்று டெல்லி ஸ்ரீ போர்ட் ஆடிட்டோரியத்தில் அவர் உரையாற்றியபோது இந்தியில் பேசத் தவறவில்லை.
தனது பேச்சை நமஸ்தே என்று சொல்லி ஆரம்பித்தார் ஒபாமா. பேச்சுக்கு இடையே, செனோரிட்டா, படே படே தேஷோன் மெய்ன்.. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும் என்று கூறி சிரித்தார் ஒபாபமா. இந்த இந்தி வசனமானது, ஷாருக் கான், கஜோல் நடித்த புகழ் பெற்ற தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் வரும் பிரபலமான வசனமாகும்.
தொடர்ந்து பேசிய ஒபாமா, ஒவ்வொரு இந்தியரும் ஷாருக் கான், மில்கா சிங், மேரி கோம் ஆகியோரின் வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றார் ஒபாமா.
ஒபாமா இந்தியாவுக்கு வந்த முதல் நாளில், செய்தியாளர்களிடம் பேசுகையில், நமஸ்தே, மேரா பியார் பாரா நமஸ்கார் (அதாவது அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கம்) என்று சொல்லித்தான் பேச ஆரம்பித்தார்.
பேச்சை முடிக்கும்போது சலே சாத் சாத் என்று கூறி முடித்தார்.