காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் போலீசாருடன் ஆபாசமாக பேசும் வாலிபர்கள்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சில வாலிபர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசுகிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் ஏராளமான வாலிபர்கள் போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசுகிறார்கள். சிலர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு போலீசாரிடம் கேட்கிறார்கள். இது போன்ற அழைப்புகள் தினமும் குறைந்தது 100 முறையாவது வருவதால் பெண் போலீசார் கலங்கிப் போயுள்ளனர்.
போலீசார் எச்சரித்தும் அந்த வாலிபர்கள் மீண்டும் மீண்டும் போன் செய்து ஆபாசமாக பேசுகிறார்கள். இதையடுத்து 90 சிம்கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தொல்லை குறைந்தபாடில்லை.
சில நேரம் இந்த வாலிபர்களின் தொல்லை தாங்க முடியாமல் பெண் போலீசார் போனை ஆண் போலீசாரிடம் அளிக்கிறார்கள். ஆனால் அந்த வாலிபர்களோ ஆண் போலீசாரை திட்டி, மிரட்டுகிறார்கள்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெண் போலீசாரில் பெரும்பாலானோர் அண்மையில் தான் பணியில் சேர்ந்தனர் என்பது அந்த வாலிபர்களுக்கு தெரிந்திருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.