உள்ளே விட அனுமதி மறுப்பு... ரோஹித் தாயார் ஹைதராபாத் பல்கலை வாசலில் அமர்ந்து போராட்டம்
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உள்ளே அனுமதிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால், கடந்த ஜனவரி மாதம் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா பல்கலைக்கழக வாசலிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா சக்ரவர்த்தி என்ற மாணவர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படித்து வந்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரோஹித், அம்பேத்கர் மாணவர் அமைப்பில் பணியாற்றி வந்தார். இந்த அமைப்பினருக் கும், பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஏபிவிபி மாணவர் பிரிவைச் சேர்ந்த சுஷில் குமார் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
ரோஹித்தின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ரோஹித்தின் தாயார் ராதிகா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரோஹித் தாயார் ராதிகா வெமுலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், ரோஹித் தற்கொலை செய்து கொண்டு இரண்டு மாதங்களாகியும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டம் நடத்த ராதிகா வெமுலா முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக தகவல் அறிந்த பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ், ராதிகா வெமுலாவை பல்கலைக்கழகத்தின் உள்ளே அனுமதிக்கக்கூடாது என பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனால், ராதிகா வெமுலா நேற்றிரவு பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த தடை உத்தரவால் ஆவேசமடைந்த ராதிகா, சுமார் 20 மாணவர்கள் புடைசூழ பல்கலைக்கழக வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால், நேற்று முன்தினம் போலீசார் நடத்திய தடியடியில் காயம் பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவே பல்கலைக்கழகத்திற்குள் செல்ல தனது தாயார் முயற்சித்ததாக ரோஹித் வெமுலாவின் தம்பி ராஜா வெமுலா தெரிவித்துள்ளார்.
இதேபோல், டெல்லி ஜே என் யூ மாணவர் தலைவர் கன்யாகுமாரும் நேற்று மாலை ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.