பெங்களூர் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க குதிரை பேரம்.. ம.ஜ.த கவுன்சிலர்கள் கேரளாவில் தஞ்சம்
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி மேயர் பதவவியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே மஜத ஆதரவு தேவைப்படுவதால், குதிரை பேரத்தை தவிர்க்க மஜத கவுன்சிலர்கள் கேரளாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் பாஜகவும், 76 இடங்களில் காங்கிரசும், 14 இடங்களில் மஜதவும் வென்றன. சுயேச்சைகள் 8 வார்டுகளில் வெற்றிக்கொடி நாட்டினர். அதில், ஒரு சுயேச்சை பிற்பாடு பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், மேயர் பதவியை தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பெங்களூர் நகர தொகுதிகளை சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள், மற்றும் 3 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாகும். மேயர் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய 128 வாக்குகள் தேவை. ஆனால் அனைத்தையும் கூட்டினாலும் பாஜகவிடம் இருப்பது 125 வாக்குகள்தான்.
எனவே பிற கட்சி கவுன்சிலர்களுக்கு ஆசை வார்த்தை கூறி கவர்ந்துவிட கூடாது என்ற அச்சத்தில் காங்கிரஸ், மஜத கட்சிகள் உள்ளன. எனவே குதிரைபேரத்தை தவிர்க்க மஜத தனது 14 கவுன்சிலர்களை கேரளாவிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது. அவர்கள் வரும் 5ம் தேதி தேவகவுடா தலைமையில் பெங்களூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்குதான் வருகிறார்கள்.
அந்த கூட்டத்தில் மஜத தனது ஆதரவை பாஜகவுக்கு அல்லது காங்கிரசுக்கு அளிக்க முடிவு செய்யும்.