இங்கிலாந்துடனான நாளைய டெஸ்ட் போட்டிக்கு நிதி ஒதுக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
இங்கிலாந்துடனான நாளைய டெஸ்ட் போட்டிக்கு நிதி ஒதுக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: இங்கிலாந்துடனான நாளைய டெஸ்ட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்த பரிந்துரைகளுக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் அதை பொருட்படுத்தாத உச்சநீதிமன்றம், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை கடந்த மாதம் 22-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விதித்திருந்தது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியை நடத்துவதற்கான நிதியை ஒதுக்கும் வகையில் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பிசிசிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கவும் பிசிசிஐ கோரியிருந்தது.
இம்மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் நாளைய கிரிக்கெட் போட்டிக்கான நிதியை ஒதுக்க பிசிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் ராஜ்கோட் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்த ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான கணக்கு விவரங்களை லோதா கமிட்டியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.