சிறுபான்மை இளைஞர் கைதின் போது கவனம் தேவை ..: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்
டெல்லி: சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்யும் விவகாரங்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சிறுபான்மையினர் மீது கை வைக்கப் போய் எங்கே வாக்கு வங்கிகளுக்கு உலை வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது போல். இப்போது சிறுபான்மையினர் கைது தொடர்பாக கவனம் செலுத்துகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சிறுபான்மையின இளைஞர்களை கைது செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
சிறுபான்மையினர் என்பது ஒரே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிப்பிடுவதாகாது. சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் சிறுபான்மை இளைஞர்களுக்குத் தொடர்பில்லை என்பது உறுதியானால் உடனடியாக அவர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்றார்.
மேலும் இது தொடர்பாக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஷிண்டே கூறியுள்ளார்.
ஷிண்டேவின் இந்தக் கடிதத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.