தாக்குதலுக்கு தயாரா இருங்க.. விமானப்படையினருக்கு தளபதியின் திடீர் உத்தரவால் பரபரப்பு!
டெல்லி: எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தேவைப்படலாம். தயாராக இருங்கள் என்று கூறி விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ். தானோவா, தனது அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் கசிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த நேரிடலாம். எனவே எப்போதும் தயார் நிலையில் இருங்கள் என்று தானோவா கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஏர் சீப் மார்ஷல் தானோவா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள சூழ்நிலையில், பாதுகாப்புக்கு எப்போதும் மிரட்டல் இருந்தவண்ணம் உள்ளது. எனவே நாம் தயாராக இருக்க வேண்டும். குறுகிய நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற நிலையில் நாம் இருக்க வேண்டும். இதுதொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபடுங்கள்.
தாக்குதலில் சிறந்து விளங்கும் வகையில் நாம் இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாம் போரில் ஈடுபட நேர்ந்தால் வெல்ல முடியும் என்று அந்தக் கடிதம் போகிறது.
விமானப்படையில் உள்ள கிட்டத்தட்ட 12,000 அதிகாரிகளுக்கு இந்தக் கடிதம் அனுப்பபப்ட்டுள்ளது. ஆனால் இது எப்படி கசிந்தது என்பதுதான் தெரியவில்லை.