மகாராஷ்டிராவில் திடீர் தேர்தலுக்கு தயாராகுங்கள்: கட்சியினருக்கு சரத் பவார் வேண்டுகோள்
மும்பை: மகாராஷ்டிராவில் திடீர் தேர்தலுக்கு தயாராகுமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதிலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 288 பேரை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவுக்கு 121 உறுப்பினர்கள், சிவசேனாவுக்கு 63 பேர், காங்கிரஸுக்கு 42 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 41 பேர் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்கியது. கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் சரத் பவார் கூறுகையில்,
மகாராஷ்டிராவில் நடக்க உள்ள திடீர் தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். பாஜகவில் உள்ள சிலரால் தான் மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைவது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு அன்று என்றார்.
பாஜக அரசு 5 ஆண்டு பதவியில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று பவார் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.