மாட்டிறைச்சி தடை... அரசு ஊழியர்கள், போலீசார் மீது தனிநபர் தாக்குதல்கள் தொடரலாம் - ஐ.பி. வார்னிங்
டெல்லி: மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிராவில் போலீஸ் கான்ஸ்டபிள் கத்தியால் குத்தப்பட்டதைப் போல அரசு ஊழியர்கள், போலீசார் மீது நாடு முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பழிவாங்கும் வகையில் யவத்மால் என்ற இடத்தில் போலீஸ் கான்ஸ்டபிளை மாலிக் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். அப்படி குத்துவதற்கு முன்னதாக, உங்க அரசாங்கம் மாட்டிறைச்சியை தடை செய்தது.. அதற்கு இதுதான் பதில்..." என்று கூறியுள்ளான்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய மாலிக், சிமி அமைப்பின் மற்றொரு பிரிவான எலக்ட்ரானின் வார்ஃபேர்ர் டெக்னாலஜி குரூப்பை சேர்ந்தவன் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தை அந்த இளைஞன் தானாகவே முன்வந்து செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது சிமி தீவிரவாத இயக்கத்தின் மேலிட கட்டளையைப் பெறாமல் ஒரு தனிநபர் தாக்குதல் நடவடிக்கையாக இதனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தை தங்களது பிரசாரத்துக்கான ஒரு கருவியாக சிமி தீவிரவாத இயக்கம் பயன்படுத்தி, போலீசார் மற்றும் அரசு ஊழியர்களை இலக்கு வைக்கக் கூடும் என்று நாடு முழுவதும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர் கதையாகிவிடக் கூடாது என்பதற்காக உளவுத்துறை இந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்துள்ளது.