மாட்டிறைச்சி தடை சட்டத்தை தளர்த்த முடியாது... மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
மும்பை : பக்ரீத் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்த முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பதவி ஏற்ற பின்னர், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மாட்டிறைச்சிக்கு விதிக்ப்பட்ட தடையை தளர்த்துமாறு பல்வேறு தரப்பினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா மற்றும் வி.எல்.ஆச்சிலியா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘விலங்குகளை வதை செய்வது முஸ்லிம் மத விழாக்களின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அங்கம். ஜெயின் சமூகத்தினரின் ‘பர்யுசான்' பண்டிகையையொட்டி இரண்டு நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கும் மாநில அரசு, மாட்டிறைச்சி மீது விதிக்கப்பட்ட தடையை ஏன் இரண்டு நாட்களுக்கு நீக்க கூடாது?'' என்று வாதிட்டனர்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த தருணத்தில் மாட்டிறைச்சி தடை மீது எந்த நிவாரணத்தையும் நாங்கள் அளிக்க முடியாது. அவ்வாறு தளர்வு கொண்டு வந்தால், அது மகாராஷ்ட்ர விலங்குகள் தடை சட்டத்துக்கு தடை விதித்ததாக ஆகி விடும் என்று கூறி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் பிரதிவாதிகள் அனைவரும் விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த பின்னர் தான் விசாரணையை முன் எடுத்து செல்ல முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.