மாட்டிறைச்சி.. முஸ்லிம் வாலிபர் கொலை வழக்கில் ஒரு குற்றவாளி கைது! விசாரணை மந்தம்
டெல்லி: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக குற்றம்சாட்டி டெல்லி அருகே நடந்த இளைஞரின் கொலை சம்பவத்தில் ஒரு குற்றவாளியை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது.
16 வயது ஜுனைட் கான், அவரின் சகோதரர் ஹசீப் மற்றும் 2 உறவுக்கார சிறுவர்கள் ஆகியோர் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க வந்திருந்தனர். இதன்பிறகு, சொந்த ஊருக்கு திரும்ப டெல்லி- பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.
அவர்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 20 பேர் கொண்ட, ஒரு கும்பல் 4 பேரின் மீது கத்தி, கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தும் யாரும் அவர்களை தடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து வீசினர். 4 பேரில் ஜூனைட் கான் உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது என்றார். ஆனால் இதுவரை 1 குற்றவாளியை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். ரமேஷ் என்ற அந்த வாலிபர் குடி போதையில் இருந்ததாகவும், சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறி 4 இளைஞர்களை கைகாட்டியதாகவும், எனவே தாக்கியதாகவும் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.