இந்தியாவின் கெடுபிடியால்... வங்கதேசத்தில் மாட்டுக் கறி விலை கிடுகிடு!
டெல்லி: தொடர்ந்து இந்திய- வங்கதேச எல்லையில் மாடுகள் கடத்தலை எல்லைப்பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் வங்கதேசத்தில் மாட்டிறைச்சியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு மேற்கு வங்க மாநிலம்- வங்கதேசம் எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினர் முகாம்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘எல்லையில் மாடுகள் கடத்தலைத் தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் வங்கதேசத்தில் மாட்டுக் கறி விலை 30% உயர்ந்துள்ளது. இன்னும் முழுமையாக கண்காணிப்பை மேற்கொண்டால் 70%-80% விலை உயர்ந்துவிடும். வங்கதேச நாட்டவர் மாட்டுக்கறி உண்பதையே கைவிடும் நிலைமையும் உருவாகும்' என்றார்.
மாடுகளின் வாழ்நாள்...
பொதுவாக நமது நாட்டில் மாடுகளின் வாழ்நாள் காலம் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும். மாடுகள் தங்கள் வாழ்நாள் காலம் முடிவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொடுப்பதை நிறுத்தி விடுவது வழக்கம்.
அடிமாடுகள்...
அதன்படி, ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் அடிமாடுகள் வங்கதேசத்துக்கு கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, மாடு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
மாடு கடத்தல்...
கடந்த 2014ம் ஆண்டு மட்டும் மாடு கடத்தலில் ஈடுபட்டபோது, தப்பிக்க முயன்றதாக 10 பேரை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படை...
இதன்மூலம் மாடு கடத்தலைத் தடுக்க இந்தியா எவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால், காலத்திற்கு தகுந்தபடி மாடுகளைக் கடத்த பல புதிய முறைகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே அவற்றையும் முறியடிக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மவுசு அதிகம்...
இந்த விசயத்தில் இந்திய எல்லைப்படை வீரர்களுக்கு வங்கதேச எல்லைப்படை வீரர்களும் உதவி வருகின்றனர். காரணம் வங்கதேசத்தில் மாட்டுக்கறிக்கு மவுசு அதிகம்.
ஊக்குவிப்பு...
எனவே, மாடுகளை வளர்க்க அந்நாட்டு விவசாயிகளை அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம், அங்கு மாட்டிறைச்சியின் விலையைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அரசின் நம்பிக்கை.