ஆடு, கோழி விலை அதிகம்... மாட்டிறைச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்க.. கோவா முதல்வரிடம் கோரிக்கை
பசு காவலர்களால் இடையூறு காரணமாக கோவாவில் மாட்டிறைச்சிக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு கோவா மாநில முதல்வர் தீர்வு காண வேண்டும் என்று மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
பனாஜி: கோவா - கர்நாடக எல்லைப்பகுதியில் பசு காவலர்களின் அத்துமீறல் அதிகரித்திருப்பதால், கோவாவில் மாட்டிறைச்சிக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு ஆகியவை உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி குறித்தான அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் 1.56 மில்லியன் டன், அதாவது, 15 லட்சத்து 60 ஆயிரம் டன் மாட்டிறைச்சி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதும், வாகனங்களில் ஏற்றிச் செல்வதும், வெட்டிக் கொல்வதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெலாகாவி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 25 டன் மாட்டிறைச்சி கோவாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகா - கோவா எல்லைப்பகுதியில் பசு காவலர்களின் அத்துமீறல் மற்றும் வன்முறை அதிகரித்து வருவதாக மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், பசு காவலர்களுக்கு பயந்து கர்நாடக மாநில விற்பனையாளர்கள் கோவாவுக்கு மாட்டிறைச்சி அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
இதனால், கோவாவில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டினால் ஆடு மற்றும் கோழி இறைச்சியின் விலையும் கோவாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பசு காவலர்களின் அத்துமீறல் தொடர்பாக கோவா முதல் மந்திரி தலையிட்டு உரிய தீர்வு காணும்வரை மாட்டிறைச்சியை அனுப்பப் போவதில்லை என பெலாகாவி மாவட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.