பார் ஓனராக வலம் வரும் சாமியாருக்கு நாசிக் கும்பமேளாவில் பங்கேற்க தடை
நாசிக்: கிரிமினல் பின்னணி கொண்ட, கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சாமியார்கள், சாதுக்கள், நாசிக் கும்பமேளாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாது என்று அகில பாரத அகாரா பரிஷ் கூறியுள்ளது.
சர்ச்சைகள் எழுவதைத் தடுக்கவும், நாசிக் கும்பமேளாவின் புனிதத்தைக் காக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் நரேந்திர கிரி பேசுகையில், சச்சிதானந்த கிரி என்ற சாது இந்த முறை கும்பமேளாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார். அவர் மது பான விற்பனையில் ஈடுபட்டிருப்பதாகவும், பிற கிரிமினல் சர்ச்சைகளில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் வந்த புகாரைத் தொடர்ந்து அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அக்னி அகாராவின் மகாமண்டலேஸ்வர் ஆன சச்சிதானந்த கிரி, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று நிரூபிக்கும் வரை கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாது என்றார் அவர்.
சச்சிதானந்தாவின் உண்மையான பெயர் சச்சின் தத்தா என்பதாகும். இவர் டெல்லியில் ஒரு பீர் பார் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது பஞ்சாபில் ஒரு போலீஸ் புகாரும் உள்ளது, முதல் தகவல் அறிக்கையும் அவர் மீது பதியப்பட்டுள்ளது.
நாசிக் கும்பமேளாவில் இந்த ஆண்டு 80 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிரது.
ஆகஸ்ட் 29ம் தேதி முக்கியமான சாஹி ஸ்னான் எனப்படும் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு சாதுக்கள், திரிம்பகேஷ்வரில் புனித நீராடுவர். செப்டம்பர் 13, 25 ஆகிய நாட்களிலும் இந்த சாஹி ஸ்னான் நிகழ்ச்சி நடைபெறும்.
கும்பமேளாவையொட்டி நாசிக்கில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாசிக் மட்டுமல்லாமல் திரிம்பகேஷ்வரிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹரித்வார், அலகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜைனியில் மட்டுமே கும்பமேளா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.