பரம சிவன் கழுத்து பாம்பாக மாற துடிக்கும் தேசியவாத காங்கிரஸ்... பாஜக ஆதரவு பின்னணி என்ன?
மும்பை: மத்தியிலும், மாநிலத்திலும் நடந்த ஊழல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அரசியல் எதிரியாக வர்ணித்துக்கொண்டிருந்த பாஜகவுடன் திடீரென கைகோர்க்க தேசியவாத காங்கிரஸ் ஓடிவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
10 ஆண்டுகளாக மத்தியிலும், 15 ஆண்டுகளாக மகாராஷ்டிராவிலும் காங்கிரசுடன் தோள் சேர்ந்து பயணித்த தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி ), மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ரொம்பவே மாறிப்போயுள்ளது.
ஆட்சியில் எப்போதும் தாங்கள்தான் இருக்க வேண்டும் என்ற அதிகார தாகம் படைத்தவர் என்.சி.பி தலைவர் சரத்பவார் என்ற முணுமுணுப்பு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபோதே கேட்க தொடங்கிவிட்டன. தேர்தலில் தோற்று, ரிசல்ட் முழுமையாக வெளிவரும் முன்பே சரத்பவார், காங்கிரஸ் தலைவர்களை கண்ணாபின்னா என விமர்சனம் செய்ய ஆரம்பித்தது, இந்த விமர்சனங்களுக்கு காரணமாகியது.
வெளியில் இருந்துதானாம்..
இந்நிலையில்தான் சட்டசபை தேர்தல் முடிவுகளை வைத்து, பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று என்.சி.பி அறிவித்துள்ளது. அப்படியே சொன்னால், கழுவி ஊற்றுவார்கள் என்பதால், வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தயார் என்று தெரிவித்துள்ளது. அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லிக்கொள்வார்களே அதுபோல.
சரத்பவாரின் அதிகார தாகம்
வெளியில் இருந்து ஆதரவு என கூறிவிட்டு மக்கள் மறந்த பிறகு நைசாக கூடாரத்திற்குள் டென்ட் அடிக்கும் வித்தையை பெரும்பாலான கட்சிகள் கற்று வைத்துள்ளதுதான் என்பது அறிவுசார் சமூகத்திற்கு தெரியாத விஷயம் கிடையாது. அதிகார பசியை தவிர, அவசரகதியில் ஆதரவு கரம் நீட்ட, என்.சி.பிக்கு வேறு சில முக்கியமான காரணங்களும் உண்டு என்று அடித்துச் சொல்கின்றனர், மராட்டிய அரசியல்பார்வையாளர்கள்.
நீர்வளத்துறை முறைகேடு
மகாராஷ்டிராவில் நடந்த காங்-என்.சி.பி கூட்டணி ஆட்சியில். சரத்பவாரின் உறவினர் அஜித்பவாரும், மராட்டிய மாநில என்.சி.பி தலைவர் சுனில் தாட்கரேவும் நீர்வளத்துறை அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். இதில் அஜித் பவார், அம்மாநில துணை முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவர்கள் இருவருமே நீர்வளத்துறை அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் நீர்வளத்துறையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிப்படையான விசாரணை
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில லஞ்ச ஒழிப்பு இயக்குநர் பிரவீன் தீக்ஷித் கடந்த ஆகஸ்ட் 22ம்தேதி, மாநில உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அஜித்பவார் தட்கரே ஆகியோருக்கு எதிராக வெளிப்படையான விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஒரே குரூப்பை சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிகப்படியான நீர்வளத்துறை திட்ட ஆர்டர்களை அளித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்துதான் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணை துவங்க ஆயத்தம்
இதையடுத்து உள்துறை அமைச்சகம் அக்குற்றச்சாட்டின் அடிப்படை முகாந்திரம் குறித்து ஆய்வு நடத்தியது. புகாரில் அடிப்படை ஆதாரம் இருப்பதாக உணர்ந்துளள உள்துறை அமைச்சகம், இது விசாரணைக்கு ஏற்றதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்த 31 பக்க அறிக்கையை, தலைமைச் செயலர் ஸ்வாதின் சத்ரியாவிடம் உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த உத்தரவிடலாமா என்பது குறித்து மாநில அட்வகேட் ஜெனரலிடம் தலைமைச் செயலர் ஆலோசனை கேட்டுள்ளார்.
மத்தியிலும் ஊழல்
இந்த சூழ்நிலையில்தான், தனது இருபெரும் தலைவர்களை காப்பாற்ற என்.சி.பி வலிய வந்து பாஜகவுக்கு ஆதரவை தருவதாக கூறப்படுகிறது. அதிகாரத்தில் பங்கு வகித்தால் தங்களுக்கு எதிராக ஊழல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று என்.சி.பி நம்புகிறது. மாநிலத்தில் மட்டும்தான் ஊழல் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளவில்லை என்.சி.பி, மத்தியிலும் அதே நிலைதான். மத்தியில் காங்.குடன் கூட்டணியில் பங்கு பெற்றிருந்தபோது, மத்திய விமானத்துறை அமைச்சராக பதவி வகித்த பிரபுல்பட்டேல், ஏர்-இந்தியா நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் தப்பிக்க..
மத்திய கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத்ராய், தனது புத்தகத்தில், ஏர்-இந்தியா நஷ்டமடைய பிரபுல்பட்டேல் எப்படி காரணமாக இருந்தார் என்பதை விவரித்துள்ளார். இந்த வழக்கில் இருந்தும் தப்பிக்க மத்திய பாஜக அரசின் தயவு என்.சி.பிக்கு தேவைப்படுகிறது. பாஜக இதில் உதவி செய்யுமா, செய்யாதா என்ற விவாதத்துக்குள் இப்போது யாரும் போகவில்லை என்றாலும், பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக தன்னை மாற்றிக்கொண்டு பாஜகவை சுற்றிவர முடிவு செய்துள்ளது என்.சி.பி என்பது மட்டும் உறுதி.