'செக்ஸ்' தொழிலாளர் என்பதற்காகவே அத்துமீறி நடந்து கொள்ள எவருக்கும் உரிமை இல்லை: டெல்லி கோர்ட்!
டெல்லி: செக்ஸ் தொழிலாளர் என்பதற்காவே ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொள்ள எவருக்கும் உரிமை இல்லை என்று டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2012ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டு அகதிப் பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் யமுனை நதிக் கரையில் கடத்தி காரில் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தது.
அத்துடன் அந்த பெண்ணிடம் இருந்த செல்போன், பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட பெண் போலீசில் புகார் கொடுக்க 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது ருவாண்டா நாட்டு அகதிப் பெண் ஒரு செக்ஸ் தொழிலாளர் என்று இளைஞர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, குற்றம்சாட்டப்பட்ட அசோக், பிரவீன், தீபக், விகாஸ் ஆகிய 4 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெளிவான ஆதாரமாக உள்ளது. இந்த 4 பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும் 4 பேரும் தலா ரூ59ஆயிரம் அபாராதமாக செலுத்த வேண்டும். இந்த தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
அத்துடன், ஒருவர் செக்ஸ் தொழிலாளர் என்பதற்காகவே அந்த பெண்ணிடம் எவர் ஒருவரும் அத்துமீறி நடந்து கொள்ள முடியாது. அவரது உரிமைகளை அபகரிக்கவும் முடியாது.
செக்ஸ் தொழிலாளர்தான் என்றாலும் அவரது விருப்பமின்றி உடலுறவு கொள்வது என்பதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 114ஏ-ன் கீழ் குற்றமாகும் என்றும் தீர்ப்பளித்தார் நீதிபதி காவேரி பவேஜா.