எதிரிகளை துவம்சம் செய்யும் ஆகாஷ் ஏவுகணை.. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்தன!
பெங்களூரு: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் பரிசோதனைகள் முழுமையாக முடிந்துள்ளதாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பெல்) அறிவித்துள்ளது.
இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ள இந்தியாவின் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகாஷ் ஏவுகணையாகும். இந்த ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியை பெல் நிறுவனம் மேற்கொள்கிறது. இதை ஏவிப் பரிசோதிக்கும் சோதனைகள் ஒடிஷாவில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தில் நவம்பர் 17ம் தேதி முதல் 22ம் தேதி மேற்கொண்டதாக பெல் கூறியுள்ளது.
இதுகுறித்து பெல் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் கடைசியாக நடத்திய பரிசோதனையின்போது அனைத்து வகை அமைப்புகளும் பரிசோதிக்கப்பட்டன. அதில் ஏவுகணையின் அனைத்துப் பகுதிகளும், அமைப்புகளும் சரியான முறையில் வெற்றிகரமாக செயல்பட்டது தெரிய வந்தது
அனைத்து வகையான சூழல்களும் பரிசோதிக்கப்பட்டன. குறைந்த உயரம், அதிக உயரம், பலமுனை இலக்குகள், பல்வேறு ஏவுகணைகளைச் சேர்த்து ஏவுவது என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது.
ஆளில்லாத விமானமான பான்ஷீ ஜெட் விமானம் இந்த சோதனையின்போது பயன்படுத்தப்பட்டது. பாரா பிளேர்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த இலக்குகளை ஆகாஷ் ஏவுகணைகள் சரியான முறையில் தாக்கி அழித்தன. இதன் மூலம் பரிசோதனை நிறைவடைந்தது என்றார் அவர்.
அடிக்கல் நாட்டு விழா:
பெங்களூரில் புதிய ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
எச்ஏஎல் நிறுவன நிலத்தில் இந்த புதிய நிறுவனம் கட்டப்படவுள்ளது. மொத்தம் 5560 சதுர மீட்டரில் இது அமைகிறது இதை எச்ஏஎல் நிறுவனமே நிர்வகிக்கும். இந்த கட்டுமானத்திற்காக இஸ்ரோ ரூ. 139 கோடியை வழங்கவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இப்பணிகள் முடிவடையும். இங்கு நமது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான கிரையோஜெனிக் எந்திரங்கள் தயாரிக்கப்படும் என்று எச்ஏஎல் தலைவர் டாக்டர் ஆர்.கே.தியாகி தெரிவித்தார்.
எச்ஏஎல்லின் பங்களிப்பைப் பாராட்டி டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், நமது விண்வெளிப் பயணத்தின் ஒவ்வொரு வெற்றியின்போதும் நாம் எச்ஏஎல்லை நினைவு கூருகிறோம். அதில் சமீபத்திய வெற்றி மார்ஸ் ஆர்பிட்டார் மிஷன் (மங்கள்யான்). வளர்ச்சியில் இருவரும் இணைந்து செயல்படுகிறோம். இது எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.
100வது பால்கன் விமானத்தைக் கொடுத்த டஸ்ஸால்ட்:
டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் சமீபத்தில் 100வது பால்கன் விமானத்தை வழங்கியது. இந்த விமானத்தில் அதி நவீன பிராட்காஸ்ட் ஏர்பார்ன் ஹெல்த் மானிட்டரிங் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென எழும் பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய முடியும்.
இந்த புதிய வசதி முதலில் 2012ம் ஆண்டு பால்கன் 7எக்ஸ் விமானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தற்போது இந்த வசதி 7 எக்ஸ், 2000எஸ், 2000 எல்எக்ஸ்எஸ், 900 எல்எக்ஸ் ஆகிய மாடல்களில் உள்ளன. விரைவில் பால்கன் 8எக்ஸ் விமானத்திலும் இது அறிமுகமாகவுள்ளது.
இதுகுறித்து பால்கன் நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் சேவை பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜேக்கஸ் சாவெட் கூறுகையில், விமானம் பறந்து கொண்டிருக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை துரிதமாக சரி செய்ய இது தொழில்நுட்பக் குழுவினருக்கு உதவும் என்றார்.
நேபாளத்தின் யக்ஷாவுடன் கரம் கோர்க்கும் ஏர் ஒர்க்ஸ்:
ஏர் ஒர்க்ஸ் இந்தியா என்ஜீனியரிங் பிரைவேட் நிறுவனம், சமீபத்தில் நேபாளத்தின் யக்ஷா இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏர் ஒர்க்ஸ் நேபாள் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.
இந்த கூட்டு நிறுவனமானது, நேபாளத்தின் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், விமான பராமரிப்பு சேவை மற்றும் சர்வதேச விமான சேவை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.
அண்டை நாடுகளிலும் தனது சேவையைப் பரப்பும் வகையில் ஏர் ஒர்க்ஸ் நிறுவனம் இந்த கூட்டு நிறுவனத்தில் பங்கேற்றுள்ளது. மேலும் தரமான விமான பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை இந்தியாவுக்கு வெளியிலும் கொடுக்க இது உதவும்.
இதுகுறித்து ஏர் ஒர்க்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் விவேக் கெளர் கூறுகையில், காத்மாண்டில் சிறந்த பராமரிப்பு பொறியியல் சேவையை வழங்க இது உதவும் என்றார்.
பொறுப்பேற்றார் ஏர் மார்ஷல் சுக்செய்ன் சிங்:
டெல்லி, விமானப்படை தலைமையகத்தில் பராமரிப்புப் பிரிவு ஏர் ஆபீசர் பொறுப்பில் ஏர் மார்ஷல் சுக்செய்ன் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். அமிர்தசரஸைச் சேர்நத் இவர், இந்திய விமானப்படையின் ஏரோநாட்டிகல் பொறியியல் பிரிவில் 1979ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பணியில் சேர்ந்தார்.
குருசேத்திரா ஆர்இசியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்த இவர் பின்னர் டெல்லி ஐஐடியில் முதுநிலைப் படிப்பை முடித்தார். புகழ் பெர்ற வெல்லிங்டன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கல்லூரியில் பயின்றவர். 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது அயராத விமானப்படை பணிக்காக விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர். விமானம், ரேடார், கைடட் வெப்பன்ஸ் ஆகியவற்றின் பராமரிப்பு நிர்வாகத்தில் நிறைந்த அனுபவம் கொண்டவர் சிங்.
புதிய எல்ஆர்டிஇ இயக்குநர்:
தலை சிறந்த விஞ்ஞானியான எஸ்.எஸ். நாகராஜ், பெங்களூரில் உள்ள மின்னணுவியல் மற்றும் ரேடார் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். டிஆர்டிஓவின் ஒரு பிரிவுதான் எல்ஆர்டிஇ. நாகராஜா, தாவணகரே அரசு பிடிடி என்ஜீனியரிங் கல்லூரியில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தார். சூரத்கல் கேஆர்இசியில் எம்.டெக் முடித்தார். 1987ம் ஆண்டு எல்ஆர்டிஇயில் இணைந்தார்.
ஆக்டிவ் அபர்ச்சர் ரேடார்கள், பேசிவ் பேஸ்ட் அரே ரேடார்கள் ரேடார் சிக்னல் பிராசசிங் மற்றும் இமேஜிங் ரேடார்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
ஆகாஷ் ஏவுகணைக்கான ராஜேந்திர பிரசாத் அர்ரே ரேடார் சிக்னல் பிரசாசரை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றியவர். மேலும் இந்த ரேடாரை, ஆகாஷ் ஏவுகணையுடன் இணைக்கும் முக்கியப் பணியிலும் முதன்மையாக செயல்பட்டவர்.