காளை மாடு விலை உயர்வு.. கழுத்தில் ஏர் மாட்டி உழுது பயிரிடும் ஏழை விவசாயிகள்!
பெல்காம்: உழவுதொழிலுக்கு பயன்படுத்தும் காளைகளின் விலை உயர்ந்துள்ளதால், அதை வாங்கி பயன்படுத்த முடியாத ஏழை விவசாயிகள், தங்கள் நிலத்தில் உழவு பணிக்காக அவர்கள் தோளில் ஏர் கலப்பையை பூட்டி பன்படுத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் கோடை மழை முடிந்து, தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் வட கர்நாடக பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவு பணி தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பெல்காம் மாவட்டத்தில் பல இடங்களில் ஏர் உழுவதற்காக பயன்படுத்தப்படும் காளைகளின் விலை விண்ணளவு உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜோடி காளைகள் 60 ஆயிரம் வரை விற்பனையாகியது. இவ்வாண்டு ஜோடி காளைகள் விலை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
காளைகளின் விலை கேட்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே போல் கடந்தாண்டு ஏர் உழுவதற்காக கொண்டுவரும் காளைகளுக்கு 700 வாடகை கொடுக்கப்பட்டது. இவ்வாண்டு 1000 முதல் 1,500 வரை வாடகை கேட்கிறார்கள். எனவே, விவசாயிகள் காளைகளுக்கு பதிலாக தங்களின் கழுத்தில் ஏர்பூட்டி உழவுப் பணியை தொடங்கியுள்ளனர்.
கலப்பையை இரண்டு பேர் இழுத்து செல்ல, இரண்டு பேர் கலப்பையை நிலத்தில் ஊன்றி செல்கிறார்கள். மற்றொருவரோ பண்படுத்தப்பட்ட நிலத்தில் நில கடலை, மொச்சை, மக்கா சோளம், கம்பு, திணை உள்பட பல விதைகள் போட்டு வருகிறார்கள். காளைகள் விலை உயர்வு, மனிதர்களை மாடாக்கிவிட்டது.