அம்மா வீட்டுக்கு போகலாம்னு அழைத்த குழந்தை.. 21 நாள் கழித்து சந்தித்த நர்ஸ்.. பெலகாவியில் நெகிழ்ச்சி
பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி "அம்மா வீட்டுக்கு போகலாம்" என பாசப் போராட்டம் நடத்திய குழந்தை 21 நாட்களுக்கு பிறகு தனது தாயை சந்தித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் மருத்துவமனையில் தங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சுகாதார பணியாளர்களின் கணவர்கள், மனைவிகள், தாய்கள், தந்தைகள், சகோதர, சகோதரிகள், வளர்ந்த குழந்தைகளுக்கு தெரியும் இவர்களின் பணி உன்னதமானது, நாடே நெருக்கடியை சந்தித்திருக்கும் நேரத்தில் இவர்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்திருப்பார்கள்.
கொரோனா தடுப்பில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர், போலீஸ் மீது மக்கள் தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு
பால் மனம் மாறாத குழந்தைகள்
ஆனால் விவரமே அறியாத பால் மனம் மாறாத குழந்தைகள்? என்ன தெரியும் அந்த குழந்தைகளுக்கு? இப்படி ஒரு சம்பவம் கர்நாடகம் மாநிலம் பெலகாவியில் நடந்தது. ஆம் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு மருத்துவமனையில் பால்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தா. இவர் கணேஷ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.
நபர்கள்
இவர் கோவிட் 19 வார்டில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் அந்த மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சுகந்தாவும் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை காணாத 3 வயது குழந்தை தந்தையிடம் தொல்லை செய்து மருத்துவமனை வாசலுக்கு வந்தது.
சம்பவம்
அப்போது தூரத்திலிருந்து குழந்தையை பார்த்த சுகந்தா, உணர்ச்சிவயப்பட்டார். குழந்தையோ வண்டியிலிருந்து இறங்கி ஓடிவரத் துடித்தது. எனினும் தந்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அப்போது அந்த குழந்தை அம்மா வீட்டுக்கு வா போகலாம் என அழுதது. பதிலுக்கு சுகந்தாவும் அழுதார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
நெகிழ்ச்சி
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தவுடன் 21 நாட்களுக்கு பிறகு சுகந்தா வீடு திரும்பினார். அப்போது அவரை பார்த்த குழந்தை வாரி கட்டி அணைத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மாறி மாறி அழுத சம்பவம் காண்போரையும் கண் கலங்க வைத்தது.