கர்நாடகாவின் பெல்காம், கார்வார் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும்: பற்ற வைக்கும் பட்னாவிஸ்
மும்பை: கர்நாடகாவின் பெல்காம், கார்வார் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்..
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில் கர்நாடகாவுடனான எல்லை பிரச்சனைகளை ஆராய அமைச்சர்கள் குழுவை அமைத்தார். இது தொடர்பாக அம்மாநில சட்டசபையிலும் விவாதம் நடைபெற்றது.
இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் மராத்தி அமைப்புகள், பெல்காமை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தின.
இதனைக் கண்டித்த கன்னட அமைப்பினர், பெல்காமை மகாராஷ்டிராவுடன் இணைக்க வலியுறுத்துவோரை சுட்டுத் தள்ள வேண்டும் என கூறினர். இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் இருந்து கர்நாடகாவுக்கு அரசு பேருந்துகள் இயக்குவது நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. கன்னட மற்றும் மராத்தி அமைப்புகள் பரஸ்பரம் போராட்டங்களை நடத்தின.
நம்பர் முக்கியம் பிகே.. பிரசாந்த் கிஷோரை வைத்து அமித் ஷாவை நெருக்கும் நிதிஷ்.. பீகாரில் புது சிக்கல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ், கர்நாடகாவில் வாழும் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் ஆதரவாக இருக்கிறது. கட்சி கொள்கை வேறுபாடுகளை தாண்டி கர்நாடகாவில் வாழும் மராத்தி சகோதரர்களுக்காக ஒற்றுமையுடன் இருக்கிறோம்.
கர்நாடகாவின் பெல்காம், கார்வார் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும். இதில் மகாராஷ்டிரா அரசு மேற்கொள்ளும் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை பார்த்துக் கொண்டு மகாராஷ்டிரா மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறோம் என்றார்.