உலக நன்மைக்காக என்ற பெயரில் சிறுமியை எரிக்க திட்டமிட்ட போலிச் சாமியார்
பெல்காம்: கர்நாடகாவில் உலக நன்மைக்காக என்ற பெயரில் 7 வயது சிறுமியை எரிக்க திட்டமிட்ட அப்பய்யசாமி என்ற போலிச் சாமியாரை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், அதானி தாலுகாவில் உள்ள ஜன்ஜர்வாட் கிராமத்தில் உள்ளது சந்திரம்மா தேவி மடம். இந்த மடத்தின் நிறுவனர் சாதசிவ் என்ற அப்பய்யசாமி. அவர் பகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான தம்பதியின் 7 வயது மகளை தத்தெடுத்தார். அந்த சிறுமியை தனது மடத்தில் உள்ள சிறிய அறையில் அடைத்து வைத்திருந்தார்.
உலக நன்மைக்காக சிறுமியை எரிக்கப் போவதாக அவர் கடந்த 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். அவர் சிறுமியை சாம்பலில் தூங்க வைத்துள்ளார். அவர் சிறுமியை எரித்த பிறகு அவர் இன்று கடவுளாக உயிர்பிக்கப்படுவார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அறிந்த போலீசார் நேற்று மடத்திற்கு சென்று சாமியாரையும், அவரது உதவியாளர் குருபத்கவுடா பாட்டீல் ஆகியோரையும் கைது செய்தனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமி அந்த அறையில் கடந்த 21 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தப்பித்து சென்றுவிட்டனர்.
சிறுமி தவிர்த்து அந்த மடத்தில் இருந்த ராதிகா(7), பிரஷாந்த்(10), சச்சின்(8), புருஷோத்தம்(8) மற்றும் கிரண்(8) ஆகிய குழந்தைகளும் மீட்கப்பட்டன.
இந்த சாமியார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தான் ஆண்மை அற்றவர் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.