ஸ்டிரைக்கில் தாக்குதல்.. ஹெல்மெட் போட்ட பேருந்து ஓட்டுநர்கள்.. இது கொல்கத்தா ஆச்சரியம்
கொல்கத்தா:மத்திய அரசு மற்றும் வங்கி ஊழியர்களின் போராட்டம் எதிரொலியால், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு பேருந்துகளை இயக்கினர்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வடமாநிலங்கள்
போராட்டத்தால் மேற்கு வங்கம், கேரளா,பீகார் ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. அங்கு கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து அடியோடி நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் வேலை நிறுத்த போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது, அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதால் ஓட்டுநர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, ஹெல்மெட் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
|
போராட்டத்தின் போது கைது
இதனிடையே, கொல்கத்தாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டனர். அதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
ரயில் நிலையத்தில் போராட்டம்
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவின் பர்த்வான் ரயில் நிலையத்தில் பயணிகள் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். மும்பையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிற்சங்கத்தினரும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள் முழக்கம்
36,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்பையின் முக்கிய பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மத்திய அரசை ண்டித்தும், தங்களது கோரிக்கைகளை முன்வைத்தும் முழக்கங்கள் எழுப்பட்டன.