பிரசவ வார்டில் தீ விபத்து: டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தை பெற்ற 2 பெண்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பிரசவ வார்டில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து இரண்டு கர்ப்பிணிகள் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தை பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் புருலியா மவாட்டத்தில் உள்ளது மன்பஜார். அங்கு இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் தீப்பிடித்தவுடன் அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் அதை பார்த்துவிட்டு அலறினார்.
அப்போது அந்த பிரசவ வார்டில் 7 பெண்கள் இருந்துள்ளனர். அதில் சிலர் பச்சிளம் குழந்தைகளுடன் இருந்துள்ளனர். தீப்பிடித்த உடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் தங்கியிருந்த உறவினர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
தீயை அணைத்த பிறகும் நோயாளிகள் தங்கள் அறைகளுக்கு திரும்பாமல் பயத்தில் வராண்டாவிலேயே இருந்தனர். தீ விபத்தால் மின் இணைப்பை மருத்துவமனை நிர்வாகத்தினர் துண்டித்துவிட்டனர். அப்போது இரண்டு பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் இருட்டில் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தை பெற்றெடுத்தனர்.
அந்த பழைய மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் மின் வயர் ரிப்பேர் வேலை பார்த்தார்களாம். முன்னதாக அறுவை சிகிச்சை கூடத்தில் ஒரு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.