மேற்கு வங்க ரயில் நிலையத்தில்... பெட்ரோல் குண்டு வீச்சு... அமைச்சர் ஜாகிர் ஹுசைன் படுகாயம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நிமிதிடா ரயில் நிலையத்தில் அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் ஹூசைன். முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஜாகிர் ஹூசைன் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதிடா ரயில் நிலையத்திற்குப் புதன்கிழமை இரவு வந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று அமைச்சர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாகிர் ஹூசைன் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், இந்தத் தாக்குதலில் அவர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதால் தற்போது கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆபத்தான கட்டம்
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பரவலாக நடைபெறும் மாடுகள் கடத்தலை அமைச்சர் கடுமையாக எதிர்த்து வந்தார். இதன் காரணமாகவே அவர் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை இப்போதும் ஆபத்தானதான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் என்று தெரியவில்லை
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்டத் தலைவர் அபு தாஹர் கான் கூறுகையில், "இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், இதற்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கவும் எஸ்.பி.க்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.
பியூஷ் கோயல்
ரயில் நிலையத்தில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதாகவும் மேற்கு வங்கத்தில் அமைச்சருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டும் வகையில் இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
சட்ட ஒழுங்கு மோசம்
இந்தத் தாக்குதல் குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி கூறுகையில், "பசு கடத்தல் மற்றும் ஊழலை எதிர்த்து அவர் தொடர்ந்து குரல் கொடுத்ததால் அமைச்சர் தாக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் அமைச்சர் எதிர்த்தனர். தற்போது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்றார்