மே.வங்கத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பலாத்காரம்.... ஒரே நாளில் அடுத்தடுத்து 2 குற்றவாளிகள் கைது!
மும்பை : மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளைப் போலீசார் அடுத்தடுத்து ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்துக்கு உட்பட்ட கங்னாப்பூரில் இயேசு சபைக்கு சொந்தமான கான்வென்ட் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 14ம் தேதி அப்பள்ளியில் கொள்ளையடிக்கச் சென்ற முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த 71 வயது மூத்த கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இச்சம்பவம். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அதில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் போலீசாரால் அறிவிக்கப்பட்டது.
விசாரணைக்காக பலர் கைது செய்யப்பட்ட போதும், முக்கியக் குற்றவாளிகளைத் தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தவர்களில் ஒருவரான சிக்கந்தர் ஷேக் அல்லது மொகமத் சலீம் என்பவரை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 12 நாட்களுக்குப் பிறகு கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது போலீசாரின் மத்தியில் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள குற்றவாளிகளையும் பிடித்து விடுவோம் என மேற்கு வங்க போலீசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.