'மண்ணின் மகளே மேற்கு வங்க மக்களின் விருப்பம்'... தேர்தல் முழக்கத்தை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'மண்ணின் மகளே மேற்கு வங்க மக்களின் விருப்பம்' என்ற புதிய தேர்தல் முழக்கத்தை வெளியிட்டுள்ளது.
தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.
அதேநேரம் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரிணாமுல் காங்கிரசும் தேர்தலை எதிர்கொள்ள தாயாராகி வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான மோதலும் முற்றியுள்ளது.
திரிபுராவில் ஒன்றுகூடிய பழங்குடி கட்சிகள்.. வைக்கும் டிமாண்டோ பெருசு.. பாஜக ஷாக்!
புதிய முழக்கம்
பாஜகவை வெளிமாநிலத்தவர்கள் என்றும் அவர்களுக்கு மேற்கு வங்கத்தின் கலாசாரம் குறித்து ஒன்றும் தெரியாது என்றும் மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'மண்ணின் மகளே மேற்கு வங்க மக்களின் விருப்பம்' (பங்களா நிஜர் மெய்கேய் சாயே) என்ற புதிய தேர்தல் முழக்கத்தை இன்று வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் மகள்
மம்தா பானர்ஜியை பொதுவாக மேற்கு வங்க மக்கல் திதி (மூத்த சகோதரி) என்றே அழைப்பார்கள். இதன் காரணமாக மம்தாவை மேற்கு வங்கத்தின் மகள் என்று சித்தரிக்கும் வகையில் இந்த முழக்கம் வெளியிடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்காளர்களான பெண்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளும் அதேநேரத்தில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்பதைக் குறிக்கும் வகையில் இந்த முழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
உருக்கமான வீடியோ
இந்த முழக்கம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வங்கத்தின் மகள் டெல்லியிடம் சரணடைய வேண்டுமா என்பதை மாநிலத்திலுள்ள தாய்மார்களும் தங்கைகளும் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், வங்கத்தின் மகளை அகற்றுவது மட்டுமே இந்த வெளியாட்களின் நோக்கம் என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.
ஜெய் சீதா ராம்
மேற்கு வங்கத்தில் பாஜக ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளது. மம்தா பான்ஜி ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்க மறுக்கிறார் என்றும் பாஜக குற்றஞ்சாட்டியது. இதற்குப் பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, "பாஜக பெண்களை மதிப்பதில்லை. அதனால்தான் முழக்கத்தில் கூட சீதையை அவர்கள் சேர்ப்பத்திலை" என்றார். மேலும், ஜெய் சீதா ராம் என்று கோஷத்தையும் அவர் முன்வைத்ததார்.